சென்னையில் ரூ. 18.2 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிஆா்ஐ
"சமஸ்கிருத வெறி; தமிழை விட 22 மடங்கு அதிகம்; 'ரூ.2500 கோடி' ஒதுக்கிய பாஜக அரசு' - சு.வெ காட்டம்!
"பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி." எனக் காட்டமாக ட்வீட் செய்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
"2014-15 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ₹2532.59 கோடியை செலவிட்டுள்ளது, இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் " என்று இன்று இந்துஸ்தான் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தரவுகள் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியறிக்கையை ரீ ட்வீட் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், "சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது; தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது" என ட்வீட் செய்திருந்தார்.
அப்பட்டமான சமஸ்கிருத வெறி!
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஒன்றிய அரசு கடந்த ஆண்டுகளாக ஒரு சார்பு நிலை எடுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்றத்திலேயே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என பிரதமர் பேசினார். ஒன்றிய கல்வி அமைச்சர் உலக மொழிகளுக்கெல்லம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றார். இதை எதிர்த்துதன் இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுபினோம்.
சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கி.பி 3ம் நூற்றாண்டில்தான் கிடைத்துள்ளது. தமிழின் முதல் கல்வெட்டு கி.மு 4ம் நூற்றாண்டில் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. எந்த அடிப்படையில் சமஸ்கிருதத்தை தாய்மொழி என்கிறீர்கள், ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள் என்று கேட்டு வருகிறோம். எந்த ஆதரமும் நிரூபிக்கப்பட்டதில்லை.
ஒரு ஆண்டுக்கு சமஸ்கிருதத்துக்கு 230 கோடி என்றால் தமிழுக்கு 12-13 கோடி... இவர்களுக்கு இருப்பது அப்பட்டமான சமஸ்கிருத வெறி, அதை ஒவ்வொரு செயலிலும் நிதிநிலை அறிக்கைகளிலும் காட்டிக்கொண்டிருக்கின்றனர். " என்றார்.
யார் சமஸ்கிருதம் பேசுகிறார்?
2004ஆம் ஆண்டு, ‘செம்மொழி’ என்று அறிவிக்கப்பட்ட முதல் மொழியான தமிழ், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான மானியங்கள் (GPIL) திட்டத்தின்கீழ் ரூ.113.48 கோடியைப் பெற்றது. இது, 2005ஆம் ஆண்டில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையைவிட 22 மடங்கு குறைவு என இந்துஸ்தான் டைம்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

சமஸ்கிருதம் பேசும் மக்கள் தொகையை ஒப்பிட்ட சு.வெங்கடேசன், "1950ம் ஆண்டு ஒவ்வொரு மொழியையும் பேசுகிற மக்கள் எவ்வளவு என்ற கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதற்காக கேர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டு வீடுகளில் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 524. ஆயிரத்துக்கும் குறைவு. இதையே பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை, வீடுகளில் ஒருவர் கூட சமஸ்கிருதம் பேசிக்கொண்டிருக்க முடியாது, அந்த 524 பேரின் பட்டியலை வெளியிடுங்கள் எனப் பெரியார் கேட்டார்.
1950ல் அதிகபட்சம் 1000 பேர் என்றே கொண்டாலும் இன்று 10 லட்சம் பேர் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டிருப்பதாக ஒன்றிய அரசு சொல்கிறது. எப்படி 70 ஆண்டுகளில் ஆயிரம் பத்து லட்சமாக மாற முடியும். உலகிலேயெ இந்த அளவு மக்கள் தொகை பெருக்கம் கொண்ட புள்ளிவிவரம் எதுவும் இருக்காது என நினைக்கிறேன். இந்த 10 லட்சம் என்பது உண்மை கிடையாது, இவர்கள் நிதி ஒதுக்க சொல்லும் சாக்கு." எனத் தெரிவித்தார் சு.வெ.
யாருக்காக நிதி ஒதுக்குகின்றீர்கள்?
மேலும், "தமிழ்மொழியின் பாரம்பரியம், வரலாறு, செய்ய வேண்டிய ஆய்வுகள், ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதி, செம்மொழி உயர் ஆய்வு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிதி, தொல்லியல் துறை அகழாய்வு தமிழக பிரிவுக்கான நிதி இது எல்லாமும் வஞ்சிக்கப்படுகிறது.
இதற்கு மாறாக ஒன்றிய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய 2500 கோடியில் செய்த உருப்படியான விஷயம் என்று எதையாவதுச் சொல்ல முடியுமா? நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவதையெல்லாம் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்கிறார்கள். ஆனால் ஒரு எம்.பி கூட சமஸ்கிருதத்தைப் புரிந்துகொள்பவர் கிடையாது. எனில் யாருக்காக இதைச் செய்கின்றனர். பாஜக அரசு வீம்புக்கென்று செயல்படுகிறது."