TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை: 6 கடைகளுக்கு அபராதம்
பெருந்துறை பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், உணவகங்கள் போன்ற கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என, பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் மற்றும் பஞ்சாயத்து பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
பெருந்துறை பகுதியில் உள்ள 16 கடைகளில் ஆய்வு செய்ததில், ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஒரு கிலோ விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நான்கு கடைகளில் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 500 வீதம், ரூ. 2,000 அபராதமும், பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து உண்பதற்கு கொடுத்த ஒரு உணவகத்துக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால், முதல் முறை எனில் ரூ. 25,000 அபராதமும், இரண்டாவது முறை எனில் ரூ. 50,000, மூன்றாவது முறையெனில் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்படும். உணவுப் பொருள் விற்பனை செய்யும், அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும். ஏற்கெனவே உரிமம் பெற்றவா்கள் உரிய காலத்துக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. உணவு சம்பந்தமான புகாா்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.