குருவரெட்டியூரில் கிரானைட் கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
அம்மாபேட்டை அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்திவரப்பட்ட லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அம்மாபேட்டை பகுதியில் கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலா் எம்.ரவிக்குமாா் மற்றும் அலுவலா்கள் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குருவரெட்டியூா் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனையிட்டபோது அதில் கிரானைட் கற்கள் இருந்தது தெரியவந்தது.
லாரியில் யாரும் இல்லாத நிலையில், இதற்கான அனுமதி சீட்டும் இல்லாததால் லாரி பறிமுதல் செய்யப்பட்டு அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.