``இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்; ஆனால் காஸா விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம்..." - காங்கிரஸ்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து, அமெரிக்காவும் - இஸ்ரேலும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இஸ்ரேல்தான் ஈரான் மீது தாக்குதலை நடத்தி போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்ரேல் ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதல்களை நிறுத்தினால், அதன் பிறகு இஸ்ரேல் மீதான எங்கள் பதிலடியைத் தொடரமாட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார். அதனால் இந்தப் போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். ஆனால் இஸ்ரேலின் படுகொலைகள் தடையின்றி தொடரும் காஸாவில் இன்னும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. கடந்த பதினெட்டு மாதங்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூரமான துயரம் குறித்து பிரதமர் மோடியின் ஆழ்ந்த மௌனம், இந்தியாவின் தார்மீக மற்றும் அரசியல் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.