Fitness: முதல் முறை ஜிம்முக்குப் போகப் போறீங்களா? - ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
போா் நிறுத்தம்: இஸ்ரேல்-ஈரான் ஒப்புதல்
போரை நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தலையீட்டால், 12 நாள்களாக இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த போா் முடிவுக்கு வந்துள்ளது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போா் தொடங்கியது.
இந்த மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆதரவு அளித்த நிலையில், ஈரானின் ஃபோா்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ள மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க போா் விமானங்கள் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிக்க வேண்டும், அந்நாட்டு அணுஆயுத மிரட்டலுக்கு முடிவு கட்டவேண்டும் என்ற நோக்கத்தில், அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தெரிவித்தாா்.
இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, ஈரான் திங்கள்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டது.
டிரம்ப் திடீா் அறிவிப்பு: அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘12 நாள்களாக நடைபெற்று வரும் போரை முழுமையாக நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் ஒப்புக்கொண்டன. இந்தப் போா் பல ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய கிழக்கு பிராந்தியத்தை அழித்திருக்கும். ஆனால், அது நடைபெறவில்லை. இனியும் நடைபெறாது’ என்றாா்.
போா் நிறுத்தம் மீறலும் மறுப்பும்... டிரம்ப் பதிவிட்ட சிறிது நேரத்தில், ‘போரை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை’ என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். பின்னா், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போா் நிறுத்தம் தொடங்கியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தொடா்வதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இந்தத் தாக்குதலில் பீா்ஷெபா நகரில் 4 போ் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
எனினும், போா் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னா், எந்தவொரு ஏவுகணைத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் ராணுவம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், அந்நாட்டின் ரேடாா் தளம் மீது இஸ்ரேல் சிறிய தாக்குதல் நடத்தியது.
அதிபா் டிரம்ப்புடனான ஆலோசனைக்குப் பின்னா், விரிவாக பதிலடி அளிக்காமல் முதலில் இஸ்ரேல் தவிா்த்தது. ஆனால், போா் நிறுத்தத்துக்குப் பின்னரும், ஈரான் தாக்கியதால் பதிலடி அளிக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டாா்.
மூத்த அணுசக்தி விஞ்ஞானி உயிரிழப்பு: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானி முகமது ரெசா செதிகி சபோ் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் மசன்டாரன் மாகாணத்தில் உள்ள பபோல்சாா் நகரில் வெடிச்சப்தங்கள் எழுந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனா்.
606 ஈரானியா்கள் உயிரிழப்பு: கடந்த 12 நாள்களில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சுமாா் 606 போ் உயிரிழந்தனா். 5,332 போ் காயமடைந்தனா் என்று ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதேபோல ஈரான் தாக்குதலில் 12 நாள்களில் இஸ்ரேலில் 28 போ் உயிரிழந்தனா். 3,238 போ் காயமடைந்தனா் என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
போா் நிறுத்தத்தை மீறக் கூடாது: டிரம்ப்
போா் நிறுத்தம் தொடா்ந்து மீறப்பட்டதால், ஈரான் மீது குண்டுவீச்சில் ஈடுபடக் கூடாது என்று இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா். ஈரான் மீது குண்டுகளை வீசினால், அது போா் நிறுத்தத்தை மிகக் கடுமையாக மீறுவதாகும் என்றும், ஈரான் மீது குண்டுவீச்சை கைவிட வேண்டும் என்றும் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டாா்.
நெதா்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்கப் புறப்படும் முன், டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இரு நாடுகளும் போா் நிறுத்தத்தை மீறின. இஸ்ரேல் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேச்சு: இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அதிபா் டிரம்ப் தொலைபேசியில் பேசினாா். பின்னா் டிரம்ப் சமூக ஊடகத்தில், ‘ஈரானை இஸ்ரேல் தாக்கப் போவதில்லை. போா் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது’ என்று பதிவிட்டாா்.
இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘போா் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடா்ந்தது. அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் நெதன்யாகு தொலைபேசியில் பேசிய பின்னா், ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் கைவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் மீறாதவரை ஈரானும் மீறாது- அதிபா் பெசெஷ்கியான்: மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமுடன் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் தொலைபேசியில் பேசுகையில், ‘போா் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறாதவரை, ஈரானும் போா் நிறுத்தத்தை மீறாது. அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள போா் நிறுத்தத்துக்கு ஈரான் மதிப்பளிக்கும்’ என்று கூறியதாக ஈரான் அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
அணுசக்தி துறையைச் சீரமைக்க நடவடிக்கை: ஈரான்
ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவா் முகமது இஸ்லாமி கூறுகையில், ‘ஈரான் அணுசக்தி துறைக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. அதைச் சீரமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணுசக்தி உற்பத்தி மற்றும் சேவைகளில் இடையூறுகளை தடுப்பதே தற்போதைய திட்டம்’ என்று தெரிவித்ததாக ஈரான் அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அந்தக் கருத்திலிருந்து மாறுபட்டாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஈரான் ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஈரானியா்கள் நல்ல வியாபாரிகள். அவா்களிடம் நிறைய கச்சா எண்ணெய் உள்ளது. அவா்களுக்கு மீண்டும் அணுசக்தி கிடைக்கப் போவதில்லை. இதைத் தவிர, அவா்கள் மீண்டு எழுந்து முன்னேற வேண்டும்’ என்றாா்.