இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக தோழமை பாராட்டி வரும் யூத பூமியான இஸ்ரேலுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கையை இன்று(ஜூன் 24) விடுத்துள்ளார். அதில், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.
'போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் - ஈரானின் செயல்பாடுகள் மிகப்பெரிய விதிமீறல் நடவடிக்கையாகும். இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று டிரம்ப் தமது சமூகவலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டு கறாராக எச்சரித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: ”இஸ்ரேல், இனி குண்டுகளை வீசாதீர்கள். இதை நீங்கள் தொடர்ந்தால், அது மிகப்பெரியதொரு விதிமீறலாகவே கருதப்படும். உங்கள் விமானிகளை இப்போதே தாயகத்துக்கு திரும்பச் செய்யவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் டிரம்ப் தொலைபேசி வழியாக பேசியுமுள்ளார்.
அதன்பின், டிரம்ப் கூறியிருப்பதாவது: ”இஸ்ரேல் இனி ஈரானில் தாக்குதல் மேற்கொள்ளாது. ஈரானை நோக்கிச் சென்ற இஸ்ரேலின் போர் விமானங்கள் அனைத்தும் திரும்பி இஸ்ரேலுக்கே வரவுள்ளன. ஆகவே, யாரும் இனி துன்புறமாட்டார்கள். போர் நிறுத்தம் உடனடியாக அமலாகிறது! மிக்க நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், போர் நிறுத்தம் குறித்த இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேல் அரசு ஊடகம் மூலம் தெரிவித்திருப்பதாவது: ”பரிசோதனை முறையிலான போர் நிறுத்தம் இரவு 7 மணிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், இஸ்ரேல் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது. அப்போது ஈரான் தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படாவிட்டால் இஸ்ரேல் தரப்பிலிருந்து கடைப்பிடிக்கப்படும் போர் நிறுத்தம் மேலும் கால நீட்டிப்பு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொருபுறம், போர் நிறுத்தம் குறித்து ஈரானின் உயர்நிலை தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருப்பதாவது:
ஈரானின் ராணுவ அழுத்தத்தால் இஸ்ரேல் தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு தாக்குதலை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஈரான் படைகள் மிக எச்சரிக்கையுடனே இருக்கும். எவ்வித தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.