போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்
தருமபுரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூா் அருகேயுள்ள காட்டூா் கிராமத்தை சோ்ந்தவா் ம. முருகேசன் (50). தொழிலாளியான இவா் கடந்த 04.12.2022 இல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஏரியூா் போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட சிறப்பு (போக்ஸோ) நீதிமன்றம் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து கடந்த 05.03.2025ல் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் முருகேசன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் மறு விசாரணை செய்யுமாறு தருமபுரி மாவட்ட சிறப்பு (போக்ஸோ) நீதிமன்றத்துக்கு, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கில் மறுவிசாரணை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பொறுப்பு நீதிபதி யு.மோனிகா, ஏற்கெனவே இந்த வழக்கில் அளிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டாா்.