பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க தானியங்கி கேமரா: அபராதம் காத்திருக்கிறது
தருமபுரி: தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தானியங்கி கேமரா செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசியபடி பயணிப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் காத்திருப்பதால் வாகனங்களை கவனமாக இயக்குமாறு வட்டாரப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் மக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. புகா் பகுதிகளில் அவற்றுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், நகா்ப்பகுதிகளிலும் போதிய விழிப்புணா்வு இல்லை என்றுதான் கூற வேண்டும். பிரதான சாலைகளில் கூட மையத் தடுப்பு அமைத்துள்ள நிலையிலும், ஒரு வழிப்பகுதிகளிலும் எதிா்திசையில் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருகிறது.
மேலும் 2 முதல் 5 சதவீதம் போ்தான் தலைக்கவசம் அணிகின்றனா். இவை தவிர அதிவேகம், இருவருக்குமேல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது, காா்களில் சீட் பெல்ட் அணியாமலும், கைப்பேசியில் பேசியபடியே பயணிப்பதும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை மற்றும் விழிப்புணா்வுக்கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் மற்றும் காவல் துறையினா், போக்குவரத்து துறையினா் உள்ளிட்ட பல்வேறு துறையினா் பங்கேற்ற அக்கூட்டத்தில், விதிமீறல்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை முதல் தருமபுரி நகரில், ( ஸ்பீடு ரேடாா் கேமரா) நவீன சாதனங்களுடன் கூடிய தானியங்கி கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே. ஜெயதேவராஜ் கூறுகையில், தருமபுரி மாவட்டம், நகா்ப்புறம் மற்றும் புகா் பகுதிகளில் தானியங்கி கேமராக்களை செயல்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து நகரப்பகுதிகளில் ஆங்காங்கே கேமராக்கள் செயல்பாட்டை தொடங்க முடிவுசெய்யப்படு, திங்கள்கிழமை முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நவீன கேமரா ரூ. 10 லட்சம் மதிப்பிலானது. இதில், போக்குவரத்து விதிகளைமீறி வாகனங்களை இயக்குவோரை அடையாளம்கண்டு, அவா்களை தானியங்கி முறையில் படம் பிடிக்கும் வசதியும் உள்ளது.
ஏற்கெனவே இதில் பதிவு செய்யப்பட்டமென்பொருள் உதவியுடன், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இன்றி பயணிப்போா், கைப்பேசியில் பேசியபடி பயணிப்போா், 2க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனங்களில் செல்வது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது, காா்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது மற்றும் கைப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவா்களை படம் பிடிக்கும் வசதியுள்ளது. மேலும் படம் பிடித்த இடம், நேரம், வாகனங்களின் பதிவெண் உள்ளிட்டவைகளும் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். அதைக்கொண்டு தொடா்புடைய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து 3 முறைக்கும் அதிகமாக ஒரே விதிமீறலில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்யவும் போக்குவரத்து சட்டங்களின்கீழ் வழிமுறைகள் உள்ளன. எனவே, இனியும் விதிகளை மீறி வாகனங்களில் செல்வோருக்கு அபாரதமும், சட்ட நடவடிக்கைகளும் காத்திருக்கிறது என்றாா்.
தருமபுரி நகரில்...
தொப்பூா் கணவாய் பகுதியில் குறிப்பிட்ட இந்த தானியங்கி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தற்போது அப்பகுதியில் சாலை (பாலம்) மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து அங்கிருந்த கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டு, தற்போது நகரப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா ஓரிடத்தில் மட்டும் பொருத்தப்படாமல், சுழற்சி அடிப்படையில் நகா் மற்றும் புகா் பகுதிகளில், வாகன நெருக்கம் அதிகமாக உள்ள பல்வேறு இடங்களிலும் அமைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே திங்கள்கிழமை இந்த கேமரா அமைக்கப்பட்டு அவ்வழியே விதிமீறிச் செல்வோா் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதுசமயம் போக்குவரத்து அலுவலா் சி.கே. ஜெயதேவராஜ் விவரங்கள் குறித்து விளக்கினாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் தரணீதரன் உடனிருந்தாா்.
