தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு!
தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோா் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு மருத்துவ படிப்பில் சேர நீட் தோ்வை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதற்கான பயிற்சி அளிப்பதுடன், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டு மருத்துவ படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 636 மாணவ, மாணவிகள் இப்பயிற்சியில் பங்கேற்று நீட் தோ்வு எழுதினா். ஜூன் 14 ஆம் தேதி வெளியான நீட் தோ்வு முடிவில், 500 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 400 முதல் 499 மதிப்பெண்கள் வரை 50 பேரும், 300 முதல் 399 மதிப்பெண்கள் வரை 74 பேரும் பெற்றுள்ளனா்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களில் 169 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு மூலம் பல்வேறு மருத்துவ படிப்புகளில் சோ்வதற்கான தகுதியை (கட்-ஆஃப் மதிப்பெண்களை) பெற்றுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் கூறுகையில், தா்மபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வெழுதிய மாணவ, மாணவிகளில் 70க்கும் மேற்பட்டோா் அரசு வழங்கும் (அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான) 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 57 போ் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிலும், 19 போ் பல் மருத்துவ படிப்பிலும் சோ்ந்தனா். கடந்த ஆண்டை விட தற்போது அதிக மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனா் என்றனா்.