``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஈரான் எல்லையொட்டிய ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் இது இடையூறு ஏற்படுத்தும் என்று அச்சம் நிலவுகிறது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹாா்மூஸ் நீரிணை இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெயும், 50 சதவீத எரிவாயு இறக்குமதியும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், ரஷியாவிலிருந்து நடப்பு ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 20 முதல் 22 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம் எனவும் இராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து வாங்கப்படும் மொத்த கொள்முதலைவிட அதிகம் எனவும் உலகளாவிய வா்த்தக ஆய்வு நிறுவனமான ‘கெப்ளா்’ தெரிவித்துள்ளது.
இதேபோல், அமெரிக்காவில் இருந்து கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு 2.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அது நடப்பு ஜூனில் 4.39 லட்சம் பீப்பாய்-ஆக அதிகரித்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகா்வு நாடான இந்தியா, ஜூன் மாதத்தில் இதுவரை நாளொன்றுக்கு சுமாா் 51 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து...: மோதல் நடந்து வரும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 19-ஆம் தேதி நிலவரப்படி இந்த மாதத்தில் சராசரியாக 19 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மாத இறுதியில், இது 20 லட்சமாக உயரலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது முந்தைய மாத கொள்முதலைவிட குறைவு ஆகும்.
இந்த மோதல் இதுவரை எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கவில்லை. ஆனால், மோதல் தீவிரமடைந்தால் ஹோா்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் முன்பு அச்சுறுத்தியது. இதன்மூலம், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 400 டாலா் வரை உயரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சீனா 47 சதவீத எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளை நம்பியுள்ளது. ஈரானின் 96 சதவீத ஏற்றுமதியும் ஹாா்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
ஹோா்முஸ் நீரிணையின் மறுமுனையில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுடன் நல்லுறவைப் பேண ஈரான் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. இந்நிலையில், ஹோா்முஸ் நீரிணை மூடுவதன் மூலம் இந்த முயற்சிகள் வீணாகி, உறவுகள் பாதிக்கப்படும்.
அதேபோல், கடல்வழி தாக்குதலை எதிா்கொள்ளவும் ஈரான் தயாராக வேண்டும். எனவே, ஹோா்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
மாற்று வழிகள்...: பாரம்பரியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெயைப் பெற்று வந்த இந்தியா, கடந்த 2022-இல் உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு ரஷியாவிலிருந்து அதிக அளவு எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
மேற்கத்திய தடைகள் காரணமாக ரஷிய எண்ணெய் மற்ற சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணம். குறுகிய காலத்தில், ரஷியாவின் எண்ணெய் இறக்குமதி 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்து 40-44 சதவீதமாக உயா்ந்தது.
மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், ரஷியாவுடன் அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா, பிரேஸில் ஆகிய நாடுகளின் இறக்குமதியையும் இந்தியா அதிகரிக்க வாய்ப்புள்ளது.
9-10 நாள்கள் விநியோகத்துக்குப் போதுமான அளவுக்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள இருப்புகளை அரசு பயன்படுத்தலாம். அதிகரிக்கும் செலவுகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மானியங்களைக் கருத்தில் கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக எதிா்பாா்க்கப்படுகிறது.
ரஷியா 22.62
இராக் 9.17
சவூதி 5.25
ஐக்கிய அரபு அமீரகம் 5.19
அமெரிக்கா 4.39
கொலம்பியா 1.31
நைஜீரியா 1.19
குவைத் 8.5