இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அதிபர் டிரம்ப்!
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இருநாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கிய நிலையில், ஈரான் உடனடியாக அதன் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், பரம எதிரிகளாக அறியப்படும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரானது 12-வது நாளை எட்டியதுடன், இன்று (ஜூன் 24) காலை அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
இருப்பினும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்நிறுத்தத்தை ஏற்பதாக அறிவித்தார்.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரண்டரை மணிநேரம் கழித்து, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு, ஈரான் மறுப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் நடைபெறும் நாட்டோ மாநாட்டுக்குச் செல்லும் முன்னர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களுடன் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“அவர்கள் (ஈரான்) போர்நிறுத்தத்தை மீறினார்கள், ஆனால், இஸ்ரேலும் மீறியது” என்று குறிப்பிட்ட அவர், “இஸ்ரேல் மீது எனக்கு மகிழ்ச்சி இல்லை” என தனது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க:இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து