Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.
அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ஆர்டர்களை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து இன்ஸ்பெக்டர் தீப்தி பிராமணேவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் முக்கிய கஃபேக்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ராஜபேத் காவல் நிலைய எல்லைக்குள் வரும் கஃபேக்களில் போலீசார் சோதனை நடத்தியபோது 'காபி ஷாப்' 'ரகசிய டேட்டிங் இடமாக' மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு காதல் ஜோடிகள் ஆபாச நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கஃபேக்களுக்கு வரும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் சிறார்கள் இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தம்பதிகளும் அடங்கும். அவர்களுக்கு தனியுரிமை அறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அங்கு பிடிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், தம்பதிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களின் அடையாள அட்டைகள் சரிப்பார்க்கப்பட்டன. விசாரணைக்குப் பிறகு சிறுவர்கள் அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே அந்த பகுதியில் நடந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பல கஃபேக்கள் தற்போது தங்கள் அமைப்பை மாற்றி வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.