செய்திகள் :

கடவுளின் தொடுகை..! மெஸ்ஸியின் சாதனைகள் ஆசிர்வாதமா? கடின உழைப்பா?

post image

இந்தப் பிரபஞ்சத்தில் மெஸ்ஸி போன்றோரின் கலைத் திறனைப் (work of art) பற்றி நினைத்தாலே ஒருசேர வியப்பினால் வரும் பொறாமையும், நாம் என்னதான் செய்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வும் மூளையை ஆக்கிரமித்துவிடும்.

அப்படிப்பட மெஸ்ஸியின் சாதனைகள் உழைப்பினால் வந்ததா அல்லது அதிர்ஷ்டத்தினால் வந்ததா?

ஆர்ஜென்டீனாவின் ரோசாரியா என்ற இடத்தில் பிறந்த லியோனல் மெஸ்ஸியை (சே குவேராவும் இங்கேதான் பிறந்தார்) செல்லமாக லியோ, மெஸ்ஸி, மேஜிக் மேன், ஏலியன் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

பாட்டியின் (சிலியா) அரவணைப்பில் வளர்ந்த மெஸ்ஸியைக் கால்பந்து விளையாட ஊக்குவித்ததும் "சிறுவனாக இருந்தாலும் புல்லட் மாதிரி ஆடுவான்" என்று நம்பிக்கையுடன் பயிற்சியாளர்களுடன் வாதம்புரிந்து இளம் வயதிலேயே அவரைவிட வயதில் மூத்தவர்கள் அணியில் சேர்த்ததும் இந்தப் பாட்டிதான்.

மெஸ்ஸியின் பாட்டி 1988-இல் இறந்துவிட்டார். அப்போது மெஸ்ஸிக்கு 10 வயதுதான். மெஸ்ஸியின் திறமையை உலகம் பாராட்டுவதற்கு முன்பே விண்ணுலகம் சென்றார்.

Inter Miami's Lionel Messi reacts after scoring during the Club World Cup group.
மெஸ்ஸியின் கொண்டாட்டம்...

இந்தப் பாட்டியின் மீதுள்ள அதீத அன்பு, பாசத்தினால் ஒவ்வொரு கோல் அடித்த பின்பும் மெஸ்ஸி தனது இரண்டு கையையும் வான்நோக்கி நீட்டுவார். மேலிருந்து அவரது பாட்டி இந்த கோல்களை பார்த்து ரசிப்பாரென மெஸ்ஸி நம்புகிறார்.

உண்மையில் மெஸ்ஸிக்கு கடவுளின் அருள் இருக்கிறதா?

2011-இல் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியுடனான பார்சிலோனாவின் இந்த ஒரேயொரு போட்டியின் ஹைலைட்ஸ் மட்டுமாவது பாருங்கள். கிட்டத்தட்ட மெஸ்ஸியைக் கொலை செய்யும் அளவுக்கு ரியல் மாட்ரிட் வீரர்கள் மாறிமாறி ஃபௌல் செய்வார்கள். மூர்க்கமாக வேண்டுமென்றே மெஸ்ஸியுடன் மோதுவார்கள்.

மெஸ்ஸி அடிபட்ட தன் வாயில் இருந்து அடிக்கடி ரத்தத்தை துப்புவார். ஒவ்வொரு முறையும் கீழே விழுந்து எழும்போதெல்லாம் இவன் மனிதனா ? ஏலியனா! என்று பார்ப்பவர்களுக்கே சந்தேகம் வரும். ஓரத்தில் ரொனால்டோ வாயில் கைவைத்து பார்த்துக் கொண்டிருப்பார் நம்மைப் போலவே. இந்தப் போட்டியில் மெஸ்ஸிக்கு கடவுளின் அருள் இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.

ரெட் ரிப்பன் நம்பிக்கை கதைகள்

2018 உலகக் கோப்பையில் மெஸ்ஸி கோல் அடிக்காமல் இருப்பார். அந்த ஆண்டு ஜூன் 18, ரஷியாவில் ஐஸ்லாந்துடனான போட்டி டிராவில் முடிந்தது. அதிலும் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை. இந்தப் போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீனா செய்தியாளர் ஒருவர் மெஸ்ஸியிடம் தனது அம்மாவின் சிவப்பு ரிப்பனைத் தருவார்.

"என்னை விடவும் எனது தாய்க்கு உங்களை மிகவும் பிடிக்கும். இது ராசியானது. உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என எனது தாய் விரும்பினார். பாதுகாப்பாக வைத்திருங்கள்" எனக் கூறினார். மெஸ்ஸியும் சிரித்துக்கொண்டே வாங்கிச் செல்வார்.

ஜூன் 26, நைஜீரியாவுடனான போட்டியில் ஆர்ஜென்டீனா வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். இந்தப் போட்டியில் மெஸ்ஸி தனது புகழ்பெற்ற வலது காலினால் கோல் அடித்திருப்பார். இந்தப் போட்டிக்குப் பிறகு அதே செய்தியாளர் மெஸ்ஸியிடம் அந்த சிவப்பு ரிப்பன் குறித்து ஞாபகம் இருக்கிறதா என்று கேள்வி கேட்பார். அதற்கு மெஸ்ஸி தனது இடது காலைக் காட்டுவார். அதில் சிகப்பு ரிப்பன் முழங்காலில் இருக்கும். அந்தச் செய்தியாளர் மிகவும் நெகிழ்ச்சியடைந்து, அம்மா இதோ பாருங்கள். மெஸ்ஸி உங்களது ரிப்பனை அணிந்திருக்கிறார் என்று கூறும் விடியோ அந்த நேரத்தில் மிகவும் வைரலானது. இப்போதும் வியப்புதான்!

உண்மையிலேயே அந்த ரிப்பன் அதிர்ஷ்டமானதா?

ஜூன் 18 - மெஸ்ஸியிடம் ரிப்பன் கிடைக்கிறது.

ஜூன் 21- குரோஷியாவுடன் தோல்வி (அந்தப் போட்டியில் மெஸ்ஸி அதை அணிந்தாரா தெரியவில்லை).

ஜூன் 26- வெற்றி ( ரிப்பன் அணிந்திருக்கிறார்).

ரவுண்ட் ஆஃப் 16 - சுற்றில் ஆர்ஜென்டீனா தோல்வியடைந்தது உலகக் கோப்பையை விட்டு வெளியேறியது.

காலத்தை கட் செய்து 2022-க்கு வாருங்கள். 2022 - உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற பிறகு மெஸ்ஸி தனது இடது காலில் அதே சிகப்பு ரிப்பன் அணிந்திருக்கும் புகைப்படங்கள் வைரலானது.

மெஸ்ஸி தனது அணியில் ஃபார்மில் இல்லாத சிலருக்கு இந்த ரிப்பனை அளித்ததாகப் பல கதைகள் பரவின. அந்தச் சிகப்பு ரிப்பன் மெஸ்ஸிக்கு அதிர்ஷடமோ இல்லையோ ரசிகரின் தாயின் அன்புக்கு அவர் செய்த மரியாதை, நிச்சயமாக ஆசிர்வதமாக மாறி இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

மெஸ்ஸியிடம் என்ன ஸ்பெஷல்?

கால்பந்தின் ஆன்மா என்பது டிரிபிள் (பந்தை எதிரணியினரிடம் இருந்து கடத்திச் செல்வது) செய்வதில்தான் இருக்கிறது. மெஸ்ஸி அதில் மாஸ்டர்.

பாடி பெயின்ட் (Body Feint) எனப்படும் தொழில்நுட்பம் மூலம் மெஸ்ஸி இதை எளிதாகச் செய்வார். தோள் பட்டையை வலது புறம் கீழிறக்கும்போது பந்தை இடதுபுறம் அடிக்க உடல் ஏதுவாக இருக்கும். அதை நம்பி டிஃபெண்டர்கள் அந்தப் பக்கம் திரும்ப மெஸ்ஸி தனது உடல் எடையைக் கண நேரத்தில் இடது காலுக்கு மாற்றி இடது தோள் பட்டையை கீழிறக்கி பந்தை வலது புறம் அடித்து வெற்றிகரமாக எடுத்துச் செல்வார். இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும்.

மெஸ்ஸி தனியாளாக 5-7 டிஃபெண்டர்களை தாண்டி பந்தை எடுத்துச் செல்வார். இதுதான் அவரை உலகத்தில் தனித்துவமான வீரராக மாற்றி இருக்கிறது. போட்டியின் எந்த நேரத்திலும் மெஸ்ஸியால் இதைச் செய்ய முடியும். இள வயதில் அதிவேகமாக செய்த மெஸ்ஸி தற்போது வயதான சிங்கம் மாதிரி குறைவாகவே ஓடுகிறார். ஆனால், இப்போதும் இன்டர் மியாமி அணிக்காக விளையாடும் போட்டிகளில் 4-5 வீரர்களை ட்ரிபிள் செய்வதைப் பார்க்க முடிகிறது.

மெஸ்ஸியின் அவதானிப்பு மிகவும் கூர்மையானது. அதிகமாக ஓட மாட்டார். பந்து எங்கு செல்கிறது? யார், யார் எங்கு இருக்கிறார்கள்? என்று கவனித்து மனதில் சரியாக ஞாபகம் வைத்திருப்பார். ஓடாமல் சேமித்து வைத்திருந்த ஆற்றலையும் யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்ற நினைவையும் சரியான நேரத்தில் உபயோகித்து பந்தை எதிரிணியின் வலைக்குள் லாவகமாக தள்ளுவார்.

பெனால்டியில் கோல் அடிப்பது எளிது. ஆனால், ஃபிரி கிக்கில் கோல் அடிப்பது கடினம். மெஸ்ஸியின் ஃபிரி கிக் கோல்களை ஸ்லோ மோஷனில் பார்த்தால் இளையராஜாவின் வயலின் இசை போலவும் அனார் கவிதை போலவும் இருக்கும்.

கடந்த வாரம்கூட கிளப் உலகக் கோப்பையில் அப்படி ஒரு கவிதையை மெஸ்ஸி அரங்கேற்றினார். இதுவரையில், 68 ஃபிரி கிக் கோல் அடித்திருக்கிறார். 77, 70 என ஏற்கெனவே இருவர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

கால்பந்தில் கிரிக்கெட் போல தனியாளாக எதையும் செய்ய முடியாது. கூட்டு உழைப்பினாலே செய்ய முடியும். கோல் போலவே அசிஸ்ட்டும் கால்பந்தில் மிக முக்கியமானது. 866 கோல்கள், 384 அசிஸ்ட்டுகளை செய்து உலகிலேயே 1,250 கோல் பங்களிப்பு செய்த முதல் வீரராக மெஸ்ஸி இருக்கிறார். அவரை யாருடனுமே ஒப்பிட முடியாது. நெய்மர் மட்டுமே ஒப்பிடத் தகுதியானவர். அவரும் காயத்தினால் பல ஆண்டுகளாகத் தவிக்கிறார்.

மெஸ்ஸி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் லீக் போட்டியில் வெளியேறியதே இல்லை. 33/33 தொடரிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் இன்டர் மியாமி அணியை உலகத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தியவர். முதல்முறையாக அந்த அணியை சப்போர்ட்டர் ஷீல்டு வெல்ல காரணமானவர். அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்.

மெஸ்ஸி வெல்லாத கோப்பைகளே இல்லை. உலகக் கோப்பையும் 2022-இல் வென்றுவிட்டார். 8 முறை போலன்தோர் (தங்கக் கால்பந்து) விருதையும் வென்றுள்ளார். யாருமே இதுவரை அவ்வளவு முறை வென்றதில்லை.

மெஸ்ஸியின் வெற்றி ரகசியம்

எண்களைச் சொல்லி பெருமை அடைவதைவிட அவர் விளையாடும் விதத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லலாம். மெஸ்ஸி பந்தை பாஸ் செய்யும் கோணங்களை யாருமே எதிர் பார்க்கவே முடியாது. அவரது மூளை சிந்திக்கும் விதமே அற்புதமாக இருக்கும். விளையாட்டு என்றாலே குறிப்பாக கால்பந்து என்றாலே உடல்தான் முக்கியம் என்று பலரும் நினைக்கிறார்கள். மெஸ்ஸி உயரம் குறைவானவர்தான். (உயரமாக வளர சிறுவயதில் ஹார்மோன் ஊசியை பயன்படுத்தியும் 169 செ.மீ.தான் வளர்ந்தார்). அதிவேகமாக ஓடாதவர். இருப்பினும் அவர்தான் உலகின் தலைசிறந்த வீரர்.

எந்த விளையாட்டாக இருந்தாலும் முதலில் மூளை, பிறகுதான் உடல். ஹைபோதாலமஸ் சரியாக வேலை செய்தால்தான் உடல் இயங்கும். கால்பந்தில் இவை இரண்டுமே வேகமாக இயங்க வேண்டும். மெஸ்ஸி அடித்த ஒவ்வொரு கோலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதுதான்.

உதாரணத்திற்கு ஹென்றி மெஸ்ஸியின் ஒரு கோலுக்கு விளக்கம் அளித்திருப்பதைப் பாருங்கள். கால்பந்தில் பிளே மேக்கராக மெஸ்ஸி தனி ராணுவமாகத் தனித்து நிற்பது புரியும்!

தொடக்கத்தில் பார்சிலோனாவில் மெஸ்ஸி கோல் அடிக்க ரொனால்டிங்ஹோ காரணம் என்றார்கள். பின்னர் , ஜவி, இனியெஸ்டா என்றார்கள். அவர்கள் ஓய்வுக்குப் பிறகுதான் மெஸ்ஸி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

God's Touch - கடவுளின் தொடுகை

ஒரே சீசனில் (2012) 91 கோல்கள் அடித்துள்ளார். உலகக் கோப்பை வென்றபோது சிகப்பு ரிப்பன் என்றார்கள். ஆனால் , தினமும் எல்லோருக்கும் முன்பே பயிற்சியைத் தொடங்கி இறுதியாக செல்லும் அவரது கடின உழைப்பை அனைவரும் மறந்து விட்டார்கள். ஏனெனில் அவர் விளையாடுவதுபோல வேறு யாருமே விளையாடாததால் அவரது உழைப்பையும் மீறி ஏதோ ஒரு கடவுள் அருள் இருப்பதாக அனைவரும் நம்புகின்றனர்.

கடந்த வாரத்தில் கிளப் உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்த ஃபிரி கிக்கினை முன்னாள் வீரர் ஒருவர் God's Touch - கடவுளின் தொடுகை என வர்ணித்தார். மெஸ்ஸி எதைச் செய்தாலும் அது கடவுளுடன் ஒப்பிடப்படுவது அவரது உழைப்பின் பரிசுதான்.

முப்பத்தெட்டு வயதாகும் மெஸ்ஸி, கிளப் உலகக் கோப்பையையும் அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பையையும் வென்று காட்டக் கடின உழைப்பும் அந்தக் கடவுளின் தொடுகையும் உடனிருக்கும் என இந்தப் பிறந்த நாளில் ரசிகர்களாக வாழ்த்தலாம்!

[ஜூன் 24 - மெஸ்ஸி பிறந்த நாள்]

சில ஆண்களுக்கு மட்டும் மார்பகங்கள் பெரிதாக இருப்பது ஏன்? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன?

ஆண்களில் சிலரின் மார்புப் பகுதி வீக்கமடைந்து பெரிதாக இருக்கும் நிலையை கைனகோமாஸ்டியா(gynecomastia) அல்லது ஆண் மார்பு வீக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்... சில ஆண்களின... மேலும் பார்க்க

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கர்ப்பமாக முடியாதா?

உயர் ரத்த அழுத்தத்தினால் இதய பாதிப்பு மட்டுமின்றி கருவுறுதலிலும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக மன அழுத்தம் அல்லது உடல் கோளாறுகளால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்(BP) இன்று முதிய... மேலும் பார்க்க

குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் உடல் பருமன் ஏற்படுகிறது? குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும்? பார்க்கலாம்..சமீபத்தில் 9 வயது சிறுவனுக்கு பரிசோதனை ச... மேலும் பார்க்க

தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? ஏன்? யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்?

தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படுவது ஒரு தீவிரமான அல்லது பொதுவான தூக்கக் குறைபாடு. சாதாரணமாக எல்லாருக்குமே தூக்கத்தின்போது மூச்சு தடைபட்டு பின்னர் சரியாகிவிடும். இது ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்... மேலும் பார்க்க