முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆகாது: இங்கிலாந்து வீரர்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்துக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 350 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
வெற்றி பெறும் எண்ணத்தில் மாற்றமில்லை
அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 350 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கியே நாங்கள் விளையாடுவோம். இங்கிலாந்து அணி வீரர்கள் அதில் தெளிவாக இருக்கிறார்கள். இந்தப் போட்டி டிரா ஆகாது என நம்புகிறோம். போட்டியின் கடைசி நாளான இன்று நடைபெறும் முதல் செஷனில் முடிந்த அளவுக்கு நேர்மறையாக செயல்படுவோம். எங்களிடம் எந்த ஒரு இலக்கையும் துரத்திப் பிடிக்கும் பேட்டிங் வரிசை உள்ளது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.
இதையும் படிக்க: 10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா