`உள்ளே போய் பார்க்கலாமா'னு கேக்க அவ்வளவு தயங்கினோம்; இன்னைக்கு... - செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர்களை உற்சாகப்படுத்தி வருகிற செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஜோடி ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கேரவனை ரசித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இதுகுறித்து செந்திலிடம் பேசினோம்.

''நான் படிச்சிட்டிருந்த நாட்கள்ல திருச்சியில் 'மலைக்கோட்டை' படத்தின் ஷூட்டிங் நடந்தது. வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். ஷூட்டிங் முடிஞ்சா விஷால் சார் போய் அந்தப் பக்கம் நின்னுட்டிருந்த பஸ்ல ஏறிக்கிடுவார். 'அவருக்கு தனி பஸ்ஸானுதான் கேட்டேன். அங்க இருந்த ஒரு அண்ணன், 'பஸ்ஸா, எந்த ஊருக்காரன்யா நீ, இதுக்கு பேரு கேரவன்'னு சொன்னார்.
அப்பதான் அந்தப் பேரையே முதன் முதலா கேக்குறேன். அப்புறம் சினிமாவுல இருந்த தெரிஞ்ச சில நண்பர்கள் மூலமாத்தான் கேரவன்னா நடிகர் நடிகைகள் ரெஸ்ட் எடுக்கிற ஒரு செட் - அப்னும் உள்ளயே எல்லா வசதிகளும்னு இருக்கும்னே தெரிஞ்சுகிட்டேன்'' என்ற செந்தில் கணேஷை இடைமறித்த ராஜலட்சுமி,
'அதுக்குப் பிறகு எப்ப கேரவனை பக்கத்துல பார்த்தோம்னா, நாங்க கலந்துகிட்ட சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போதுதான்' என்றபடி பேசத் தொடங்கினார்..
''போட்டியாளரா நாங்க கலந்துக்கிட்ட அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடுவர்களுக்கு கேரவன் இருக்கும். அங்கயும் வேடிக்கை பார்த்திருக்கோம். 'உள்ள போய் ஒரு எட்டுப் பார்க்கலாமா'னு மனசுக்குள்ள துடிக்கும். ஆனா யாராவது ஏதாவது நினைச்சுட்டாங்கிற எண்ணம் வந்து தடுத்திடும்.
ஆனா ஒரு நாள் இப்படி வேடிக்கை பார்த்திட்டிருந்ததை கேரவனைப் பராமரிக்கிற ஒரு அண்ணாவே பார்த்துட்டார்.

'உள்ள போய் பார்க்கணுமா'னு கேட்டார். ஆமான்னதும், அவரே கூட்டிட்டுப் போனார். பாத்ரூம் போக, படுக்க, சாப்பிடன்னு உள்ளயே எல்லா வசதிகளையும் பார்த்தப்ப ஒரே ஆச்சரியமா இருந்தது. 'பெரிய ஆளா ஆனா நிச்சயம் நமக்கும் இப்படியொரு கேரவன் தருவாங்கல்ல' என நினைக்கத் தோணுச்சு' என்றார் ராஜலட்சுமி.
இருந்தாலும் இந்த தம்பதிக்கு முதன் முதலில் கேரவன் கிடைத்தது இங்கில்லை. கனடாவில்தானாம்.
அந்த அனுபவத்தையும் உற்சாகத்துடன் பகிர்ந்தார் செந்தில் கணேஷ்..
'' சூப்பர் சிங்கர் முடிஞ்ச பிறகு கனடாவுல ஒரு ஷோவுக்குப் போயிருந்தோம். ரவூஃபா மேடம்தான் கூட்டிட்டுப் போனங்க. அங்கதான் முதன் முதலா கேரவன்ல தங்கினோம். ஆனா அங்க பார்த்தீங்கன்னா நம்மூர் கேரவன்களை விட பல மடங்கு வசதிகளுடன் இருந்துச்சு.
திரும்ப சென்னை வந்ததும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளின் ஷூட்டிங், விளம்பரப் பட ஷூட்னு சில இடங்கள்ல கலந்துக்கிடறப்பெல்லாம் கேரவன்ல தங்கியிருக்கோம். ஆனா சில நேரங்கள்ல கேரவனை மத்தவங்களுடன் ஷேர் பண்ணிக்கிடற மாதிரிதான் இருக்கும்.

ஆனா இந்த சீசன்ல எங்களை ஸ்பெஷலா கூப்பிட்டிருக்கிறதாலயோ என்னவோ, எங்களுடைய பெயரை எழுதி எங்களுக்குன்னு தனியா ஒரு கேரவனை ஒதுக்கியிருக்காங்க. நாங்க ரூம்தான் ஒதுக்கியிருப்பாங்கன்னு நினைச்சோம். வந்து பார்த்த பிறகே இன்ப அதிர்ச்சியா இருந்தது.
அதுக்காக ரூம் புக் பண்ணினா சுமார், கேரவன் ஒதுக்கியிருந்தா உசத்தின்னெல்லாம் நாங்க நினைக்கல. ஆனாலும் நம்ம பேர் கொண்ட இந்த கேரவனைப் பார்த்தப்ப ஒரு படி உயரந்திருக்கோமோன்னு மனசளவுல ஒரு எண்ணம் உருவாகுது. அது இன்னும் அதிகமா உழைக்கம்ணும்கிற உத்வேகத்தையும் தருது'' என்கிறார் இவர். கேரவன்ல உங்களுக்கூப் பிடிச்ச விஷயம்னு எதைச் சொல்லலாம் என ராஜலட்சுமியிடம் கேட்டோம்.
''நண்பர்களை சந்திக்க நல்லா கம்ஃபர்ட்டா இருக்கு. குட்டியூண்டு ரூம்கிறதால சட்னு கூலாகி ஏசி வந்திடுதா , உள்ளே வந்தா உடனே தூக்கம் வந்திடுது. இந்த ரெண்டுமே எனக்குப் பிடிச்சிருக்கு'' என்கிறார் உற்சாகமாக