ஏர் இந்தியா விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி வழக்கு!
பாதுகாப்பு தணிக்கைகள் முடியும்வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் மீது புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் நிறைய ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாதுகாப்பு தணிக்கைகள் முடிவடையும் வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மே 20 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் தில்லியில் இருந்து சிகாகோ சென்றபோது இருக்கைகளை சாய்க்க முடியவில்லை, பொழுதுபோக்கிற்காக டிவி உள்ளிட்டவை வேலை செய்யவில்லை, ஏசி வேலை செய்யவில்லை என வழக்கறிஞர் அஜய் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், '1934 ஆம் ஆண்டு விமானச் சட்டம், 1937 ஆம் ஆண்டு விமான விதிகள் ஆகியவற்றை விமான நிறுவனங்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை, இதனால் ஒட்டுமொத்த விமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி