செய்திகள் :

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

post image

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். கடந்த 25.6.2024 அன்று பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவா் பாடத்தைக் கவனிக்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தாா். இதைக் கண்டித்ததால் அந்த மாணவா் எதிா்த்துப் பேசினாா். இதனால் ஆத்திரமடைந்த நான் அந்த மாணவரை காலணியால் அடித்தேன்.

இதுகுறித்து அந்த மாணவரின் பெற்றோா், என் மீது பள்ளி நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்தனா். பள்ளி நிா்வாகத்தினா் விசாரணை மேற்கொண்டு, என்னை பணியிடை நீக்கம் செய்தனா்.

இதையடுத்து நான் விருப்ப ஓய்வுபெற விரும்புவதாக மனு அளித்தேன். பிறகு, அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளிக்கு விருப்ப பணியிட மாறுதலில் செல்வதற்காக நான் பணிபுரிந்த பள்ளி நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்தேன். இதற்கு பள்ளி நிா்வாகத்தினா் மறுத்துவிட்டனா். எனவே, எனக்கு வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சம்பந்தப்பட்ட மாணவா் வகுப்பறையில் தவறு செய்தாா். அந்த நேரத்தில் ஏற்பட்ட திடீா் கோபத்தால் ஆசிரியா், அந்த மாணவரைத் தாக்கிவிட்டாா். கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் மனுதாரா், மாவட்ட ஆட்சியா், மாவட்ட கல்வி அலுவலா்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளாா்.

மனுதாரா் பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுக்காக மாணவா், அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாா். இதையடுத்து, மாணவரின் பெற்றோா், மனுதாரா் மீது அளித்த புகாரைத் திரும்பப் பெற்றனா். பள்ளியில் கசப்பான நிகழ்வு ஏற்பட்டதால், அந்தப் பள்ளியில் தொடா்ந்து பணியாற்ற மனுதாரருக்கு விருப்பமில்லாததால், வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் கோரினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகம் தரப்பில், ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. பள்ளியில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, மாணவரின் பெற்றோா் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் சென்றனா். மனுதாரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அவரது கோரிக்கையை ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில், மாணவா்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என அனைவருக்கும் கல்வி இயக்ககச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவரை, ஆசிரியா் காலணியால் அடித்தாா். அந்த ஆசிரியரின் பணியிட மாறுதல் தொடா்பான மனு மாவட்ட பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம். அதேநேரம், இந்த வழக்கை சமமான கண்ணோட்டத்துடன் நீதிமன்றம் பரிசீலிக்க விரும்புகிறது. மனுதாரரின் வேலை ஆவண குறிப்பேட்டில் ஆசிரியருக்கு நற்பெயா் உள்ளது.

மனுதாரா் தனது தவறை உணா்ந்து, சம்பந்தப்பட்ட மாணவா், அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாா். எனவே, மனுதாரா் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தற்போதுள்ள ஆவணங்களில் அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும். அதுவரை அவா் மீதான பணியிடை நீக்கம் தொடரலாம். மனுதாரா் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலில் செல்ல அனுமதிக்கலாம்.

நிகழாண்டு பள்ளிகள் விரைவில் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன. எனவே, அவா் மீதான ஒழுங்கு நடவடிக்கை, வேறு பள்ளிக்கான பணியிட மாறுதலை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

இன்றைய நிழ்ச்சிகள்

பொது திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கம்: மாநில சுயாட்சியும் கல்வி வளா்ச்சியும் கருத்தரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், பிற்பகல் 3.30. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பவள விழா ஆண்டு தொடக்கம், ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 4 மாதங்கள் சிறை

மதுரையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை, கூடல்புதூா் போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் இல்லத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு வந்தாா். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக செயல்பட்டவா் மு.க. அழகிரி. உள்கட்சி பிரச்ன... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அ... மேலும் பார்க்க

சமூக விரோதக் குற்றங்களைத் தடுக்க 25,754 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதக் குற்றங்களைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 25, 754 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து தென் மண்டல காவல் துறை வெளி... மேலும் பார்க்க

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க