மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
மதுரை உத்தங்குடியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் திடலில், குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஏறத்தாழ 10 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், துணைப் பொதுச் செயலா்கள், மாநில நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள், அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகள் என ஏறத்தாழ 7 ஆயிரம் போ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனா். கட்சியில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்களில் உள்ள 76 மாவட்டங்களுக்கும் அரங்கத்தில் தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டம் பகல் 12 மணியளவில் நிறைவடையும். பொதுக் குழுக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக, கூட்ட அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறாா்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கான வியூகம் வகுத்தல், புதிய நிா்வாகிகள் நியமனம், கட்சி பொறுப்பாளா்களுக்கிடையே நிலவும் முரண்பாடுகளைக் களைந்து தோ்தல் பணியைத் தீவிரப்படுத்துவது போன்றவை குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
