RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!
பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதையொட்டி, அவருக்குப் பதிலாக பிசிசிஐயில் புதிய இடைக்காலத் தலைவராக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதவியேற்கவுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
வருகிற ஜூலை மாதத்தில் பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா மூன்று மாதங்கள் பதவி வகிப்பார் என்றும், செப்டம்பரில் நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலிக்குப் பிறகு புதிய தலைவராக ரோஜர் பின்னி 2022 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தேர்தலின் போது 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வருகிற ஜூலை 19 ஆம் தேதியன்று ரோஜர் பின்னி 70 வயதை எட்டுகிறார். பிசிசிஐ தலைவருக்கான வயது வரம்பு 70. அதனாலேயே புதிய தலைவருக்கான தேர்வு நடைபெற்றுள்ளது.
ரோஜர் பின்னி தலைவராக இருந்தபோது இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?