Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
'சரிகமப' லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் மஹதியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

மஹதி பேசுகையில், "சின்ன வயசிலிருந்தே எனக்குப் பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதிருந்து பாடல்களும் அதிகமாகக் கேட்பேன். வீட்டுல எப்போதும் அம்மா பாடிட்டு இருப்பாங்க. சிங்கர் கிடையாது.
ஆனா, அம்மாவுக்கு பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்ககிட்ட இருந்துதான் நான் பாடுறதுக்குக் கத்துக்கிட்டேன். 'சரிகமப' ரொம்ப ஜாலியாப் போச்சு. இப்போ 'சரிகமப' செட்டை ரொம்ப மிஸ் பண்றேன். ஶ்ரீமதி, ஹேமித்ரா, அபினேஷ்னு எல்லாப் போட்டியாளர்களுமே எனக்குப் ப்ரண்ட்ஸ்தான்.
அம்மா, அப்பா, தாத்தானு எல்லோருமே 'பைனல்ஸ் வரைக்கும் வந்ததே பெரிய விஷயம். டைட்டில் நமக்கு முக்கியம் இல்ல. இதுவே நமக்குப் போதும்'னு சொன்னாங்க," என்றார்.
நிகழ்ச்சியின் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவரான புவனேஷ் தன்னுடைய சுட்டித்தனங்களால் ஒவ்வொரு வார 'சரிகமப' எபிசோடுகளிலும் ட்ரெண்டிங் ஆவார்.
ஆனால், அவர் பைனல்ஸுக்கு தேர்வாகவில்லை. அந்த சமயத்தில் மஹதி தன்னுடைய செலக்ஷன் கிரீடத்தைப் புவனேஷுக்கு அணிவித்தார்.
மழலையின் இந்தச் செயல் அன்றைய எபிசோடில் பலரையும் எமோஷனலாக்கியது.

அது குறித்து மஹதி, "புவனேஷ் என்னுடைய பெஸ்ட் ப்ரண்ட். நாங்க எல்லோருமே புவனேஷ்தான் செலக்ட் ஆவான்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், அவன் செலக்ட் ஆகாத அந்த ஒரு தருணத்துல அவனுடைய முகமே மாறிடுச்சு.
அவன் சிரிச்சான். ஆனா, அந்த சிரிப்பு சரியாக இல்ல. அவன் கஷ்டப்படக் கூடாதுனுதான் அப்போ அவனுக்குக் கிரீடத்தைக் கொடுத்தேன். அவனோட ஸ்பெஷலான விஷயமே டான்ஸ்தான். அவன் ஒரு ஸ்டெப் போடுவான்.
அந்த மாதிரி வேறு யாராலும் போட முடியாது," என்றவர், "பைனல்ஸுக்கு சிவகார்த்திகேயன் வந்திருந்தாரு. அவர் வருவார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அவர் என்கிட்ட 'சின்ன தாயவள்' பாடல் பாடச் சொன்னாரு.
அந்தப் பாடல் கேட்டதும் அப்போவே அவர் அழுதுட்டாரு. அவர் ஏன் அழுதார்னு தெரியல," என்றவர், எஸ்.பி.பி-யின் 'மண்ணில் இந்த காதல்' பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தியிருப்பார்.

அந்தப் பாடல் குறித்து அவர், "அந்தப் பாட்டைப் பாடுறதுக்கு அப்பாதான் காரணம். இந்தப் பாடலை கொடுத்துட்டாங்க, எப்படிப் பாடுறதுனு அப்பாகிட்டப் புலம்பிட்டு இருந்தேன். அப்போ அப்பா என்னை நீச்சல் அடிக்கிறதுக்கு கூடிட்டுப் போனாரு.
அதன் மூலமாதான் மூச்சு விடாம பாடுறதுக்குக் கத்துக்கிட்டேன். எஸ்.பி.பி சரண் சாரும் 'இந்தப் பாடலை நீ பாடுவனு நான் எதிர்பார்க்கல.
இந்த ஸ்காமை நீ ரிவீல் பண்ணிட்ட'னு சொன்னாரு. அதே மாதிரி சைந்தவி மேமும் 'மஹதி எங்களுக்கு கிடைச்ச லக்கி சார்ம்'னு சொன்னாங்க," எனப் பேசி முடித்தார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்