ஒரு தலைக் காதல்: கத்தியால் குத்தி கல்லூரி மாணவி கொலை!
ஒரு தலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது குடும்பத்தாரும், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் குடும்பத்தாரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வடுகபாளையம் செல்லமுத்து நகரில் குடியிருந்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்பு பிரவீன் குடும்பத்தார் பொள்ளாச்சி உடுமலை ரோடு அருகில் குடிபெயர்ந்து உள்ளனர்.
ஆனால் பிரவீன் கல்லூரி மாணவி அஸ்மிகாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆத்திரமடைந்த பிரவீன் கல்லூரி மாணவி இடம் சண்டை போட்டுள்ளார்.
கோபம் அடைந்த பிரவீன், மாணவி இருக்கும் வீட்டிற்குச் சென்று கத்தியால் குத்தி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த கொலை குறித்து ஏஎஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர் பிரவீன் கோவை மேற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.