இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது: டாக்டர் பரசுராமன்
இயற்கை வேளாண்மை குறித்தும் வேளாண்மையில் இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் பேசியது:
இந்திய நாடு விவசாய நாடு என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே சொல்கிறோம். உலகத்திற்கே உணவிட்ட நாடு இந்தியா. பஞ்சாபில் கோதுமையில் புரட்சி இருந்தாலும் தமிழ்நாடு அரிசியில் மிகப்பெரிய புரட்சியை செய்தது. யானை கட்டி போர் அடித்த ஊர் தஞ்சாவூர். அதற்கு அடுத்தபடியாக அரிசி உற்பத்தியில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து விதமான பயிர்களும் விளையக்கூடிய பருவ நிலை இருக்கிறது. காய்கறிகள், பயறு வகைகள், அரிசி என அனைத்தும் விளையும்.
இளைஞர்கள் கண்டிப்பாக விவசாயத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பாதுகாக்க முடியும் என்றால் இளைஞர்களால்தான் முடியும். எம்.எஸ். சுவாமிநாதனுடன் 35 ஆண்டு கால பயணத்தில் 'விவசாயிகளுக்கான தேசிய ஆணையம்' அமைத்தது அவர்தான். எந்த நாட்டிலும் விவசாயிகளுக்கு தனி ஆணையம் இருந்ததில்லை. இந்தியாவில் 2007ல் விவசாயிகளுக்கான ஆணையம் கொண்டு வரப்பட்டது.
அவர் அளித்த அறிக்கையின் சாராம்சம் 'விவசாயிகளைப் பாதுகாப்போம், விவசாயத்தைப் பாதுகாப்போம்' என்பது. இந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை எப்படி கொண்டு வரப்போகிறோம்? அது யாரால் முடியும்? அவரது திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களைச் சார்ந்திருக்கிறது.
140 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 74% இளைஞர்கள். அப்படி இருக்க இளைஞர்களால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். விவசாயத்திலும் ஏன் அவர்களைக் கொண்டுவரக் கூடாது? நிலையான வேளாண்மை வேண்டுமென்றால் இளைஞர்கள் வேளாண்மைக்கு வர வேண்டும்.
1960களில் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது. எம்.எஸ். சுவாமிநாதன், அப்போதைய வேளாண் அமைச்சர் சி. சுப்பிரமணியம், அன்றைய ஐஏஎஸ் அதிகாரி சிவராமன் ஆகிய 3 பேருக்கும் இதில் பங்கு இருக்கிறது. அனைவரும் சேர்ந்து கொண்டுவரப்பட்டதுதான் பசுமைப் புரட்சி என்று எம்.எஸ். சுவாமிநாதன் கூறுவார்.
1953ல் அமெரிக்காவில் டாக்டர் நார்மன் போர்லாவும் எம்.எஸ். சுவாமிநாதனும் முதன்முதலில் பேசியதுதான் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. 1962ல் நார்மன் போர்லா இந்தியா வந்தார். அவர் கொண்டுவந்த கோதுமை வகையால் 1964ல் 4% ஆக இருந்த கோதுமை உற்பத்தி, பின்னர் 1968ல் 17% ஆக உயர்ந்தது. அதுதான் பசுமைப் புரட்சி. ஐஆர் 8 என்ற புதிய அரிசி வகையை கொண்டுவந்தவர் எம்.எஸ். சுவாமிநாதன். அது அப்போது மிகப்பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்தியது.
வேளாண்மையில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் 178க்கும் அதிகமாக வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. விவசாயம் சார்ந்து தொழில் தொடங்குவதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்களும் இருக்கின்றன.
செயற்கை ரசாயனங்கள் குறித்த விழிப்புணர்வு இப்போது அனைவருக்கும் வந்துவிட்டது. அன்று உரம் போட வேண்டிய கட்டாயம் இருந்தது. 1968ல் வால்டரில் நடந்த ஒரு அறிவியல் மாநாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முன்பாகவே சுவாமிநாதன், 'நாம் குறிக்கோளை அடைந்துவிட்டோம். இனி செயற்கை ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம், அதன் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டும்' என்று கூறினார். அதனால்தான் இன்று இயற்கை வேளாண்மை குறித்து பேசுகிறோம்.
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும், செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் என்பது குறித்தும் சொல்ல வேண்டும். அதுதான் இயற்கை வேளாண்மை. உணவு உற்பத்தி குறைந்தாலும் நல்ல உணவு சாப்பிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிக வருவாயும் கிடைக்கும். அதனால் இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும்.
விவசாயம் செய்ய முடியாத நிலங்களை பயன்படக்கூடிய வகையில் மாற்றலாம். நிலங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும்போது அனைத்து நிலங்களிலும் விவசாயம் செய்யலாம்.
மனிதனின் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இயற்கையான முறையிலேயே இருக்கின்றன. முருங்கை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரைகள் என அனைத்திலும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. சென்னை போன்ற நகரங்களில் வீட்டு மாடித் தோட்டம் நிறைய வந்துவிட்டது.
செயற்கை உரங்களை எவ்வளவு குறைக்கிறார்களோ அந்த மண் நன்றாக இருக்கும். அதிக உரம், அதிக தண்ணீர் கொடுக்கும்போது மண் கெட்டுப்போகிறது. நிலங்களில் நெல் மட்டுமே பயிரிடக்கூடாது, காய்கறிகள், பருப்பு வகைகளை பயிரிட வேண்டும். ஏன் நாம் வெளி மாநிலங்களை வெளி நாடுகளை நம்பியிருக்க வேண்டும்.
விவசாயத்தில் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களில் மானியம் கிடைக்கிறது. உதாரணமாக தஞ்சாவூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்ப ரீதியாக பயிற்சிகளை வழங்குகிறது. விதைகள், உயிரி தொழில்நுட்பம், வேம்பு என விவசாயத்தில் பல வகைகள் இருக்கின்றன. பருவ நிலைக்கு ஏற்றது போல விவசாயம் செய்யலாம். இதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவுகிறார்கள். அதேபோன்று விவசாய பொருள்கள் சேமிப்பு இப்போது சரியாக இல்லை. அதைப்பற்றி யோசிக்கலாம்.
இளம் விஞ்ஞானிகளை அதிகம் உருவாக்க புதிய இளைஞர் சயின்ஸ் காங்கிரஸ் என்று ஆரம்பித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அறிவியல் கல்வியை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு அந்த நிலத்துக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப வசதியுடன் விவசாயம் மேற்கொள்ளலாம். வேதாரண்யத்தில் உப்பு நீரில் என்ன செய்ய முடியும்? என்று அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்போது அது வெற்றியடையும்.
அம்பானி, அதானி உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் அனைவரும் விவசாயம் செய்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு தொழில் செய்தாலும் அடிப்படை விவசாயம்தான்.
அதனால் இளைஞர்களுக்கு விவசாயத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன. வேளாண்மையை அறிவுபூர்வமாக இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது அது வெற்றியடையும்.