RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச...
கன்னியாகுமரி: ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்; காப்பாற்றிய தொழிலாளர் பலியான சோகம்; என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பைச் சேர்ந்த பீட்டர் (58). இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் பீட்டர் தினமும் குளிக்கச் செல்வது வழக்கம். அவருக்கு நீச்சல் தெரியும். குழித்துறை ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணை பகுதியில் சிறு வயது முதலே குளிப்பது பீட்டரின் வழக்கம்.
தண்ணீர் குறைவாக உள்ள சமயத்தில் அந்த தடுப்பணை வழியாக ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு மக்கள் நடந்து செல்வதும், இரு சக்கர வாகனங்களில் செல்வதும் வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகமாகச் செல்கிறது.
குழித்துறை தடுப்பணை பகுதியைத் தாண்டி மேல் பகுதி வழியாகச் சுமார் ஒரு அடி உயரத்திற்குத் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
கடந்த 10 நாளுக்கு மேலாகத் தடுப்பணையின் மேல் பகுதி வழியாக வெள்ளம் செல்வதால் பாசி படர்ந்து வழுக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் செல்லவும், மக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

குழித்துறை தடுப்பணை பகுதியில் ஆற்றில் பீட்டர் மற்றும் சிலர் நேற்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 13 மற்றும் 15 வயது உள்ள இரண்டு சிறுவர்கள் வி.எல்.சி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் சென்றனர்.
ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தபோது வரும்போது தண்ணீர் வேகமாகச் சென்றதாலும், வழுக்கில் சிக்கியும் இருவரும் தண்ணீரில் விழுந்தனர்.
அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்றது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு தடுப்பணையின் மறுபுறம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பீட்டர், சிறுவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தடுப்பணையின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதியில் குதித்தார்.
வெள்ளத்தில் சிக்கிய இரு சிறுவர்களையும் மீட்டு, தடுப்பணைக்கு மேலே ஏற்றிவிட்டார் பீட்டர். இரு சிறுவர்களையும் காப்பாற்றிய பீட்டரால், எதிர் நீச்சல் போட்டுக் கரைசேர முடியவில்லை. இதையடுத்து அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டரின் உடல் இன்று மாலை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பீட்டருக்கு, மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற பீட்டர் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.