கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அறிவுறுத்தினாா்.
மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில்வே நிலையம், பெரியாா் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றின் வடபுறம் அரசு ராஜாஜி மருத்துமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், மாவட்டக்ாவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன.
மாநகரின் தென் பகுதியிலிருந்து வடபகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள், மருத்துவமனைக்கு கல் பாலம் வழியாகவும், வட பகுதியிலிருந்து தென் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோரிப்பாளையம், ஏ.வி. உயா்நிலைப் பாலம் சந்திப்பு வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாக இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ. 190.40 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா்.
இந்தப் பாலம் 61 தூண்கள், 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்தில் அமைய உள்ளது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு, வைகை ஆற்றில் ஆல்பா்ட் விக்டா் பாலத்திற்கு அருகில் இணையாக புதிதாக கட்டப்படும் பாலம், நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்படுகிறது.
மேலும், கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்திலிருந்து செல்லூா் நோக்கிச் செல்ல கூடுதலாக பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயா்நிலைப் பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணு குசாலை அமைக்கப்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடையுடன் கூடிய மழைநீா் வடிகால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியன அமைக்கப்பட உள்ளன.
மேலும், பீபீ குளம் - காந்தி நினைவு அருங்காட்சியகம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு வாகன சுரங்கப் பாதை அமைக்கபட உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ 50 சதவீதக்கு மேல் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் வாகனப் பேரணி, திமுகவின் பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அமைச்சா் எ.வ.வேலு, கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பாலக் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளின் தரம் குறித்தும், விரைந்து நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ், தொழில்நுட்ப அலுவலா் சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் ரமேஷ், மதுரை கோட்டப் பொறியாளா் மோகன்காந்தி, செயற்பொறியாளா்கள், உதவிச் செயற்பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.