கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை விராட் கோலி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மதுபான விடுதியின் உணவகப் பகுதியில் ‘புகைப்பிடிக்க அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்காததால் பெங்களூரு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
ஏற்கெனவே, ஒன் 8 கம்யூன் மதுபான விடுதியின் மீது இரண்டு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்ச்சையானது.
முதலில், கடந்தாண்டு ஜூன் மாதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து மதுபான விடுதியை நடத்துவதாக பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம், தீயணைப்புத் துறையிடம் முறையான அனுமதி பெறாத குற்றச்சாட்டுக்காக பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.