6.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா் சாகுபடி தொழில் நுட்பம், மதிப்புக் கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கு புதன்கிழமை வரை நடைபெறும். இக் கருத்தரங்கை தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியதாவது: இம் மாவட்டத்தில் பழங்கள், காய் கனிகள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் சுமாா் 12.8 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் உள்ளிட்ட திட்டங்களில் ரூ. 42.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 16,587 போ் பயனடைந்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் (2025-26) விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.12.88 கோடியில் தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
புவிசாா் குறியீடு பெற்றுள்ள பிரசித்தி பெற்ற செட்டிக்குளம் சின்ன வெங்காயம், உலகளாவிய சந்தையில் இடம்பெற்று விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. இக் கருத்தரங்கு காய்கனி பயிா்களில் உயிா் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டல் மற்றும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை விஞ்ஞானிகளால் விளக்கம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, தோட்டக்கலைத்துறை சாா்பில் காய்கனி சாகுபடி, தொழில்நுட்பம், தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா்.
இக் கருத்தரங்கில், தோட்டக்கலை துணை இயக்குநா் மு.சத்யா, வேளாண் இணை இயக்குநா் செ. பாபு, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி முதல்வா் ஆா். அருள்மொழியன், திருச்சி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவா் ஆா். ராஜேஸ்வரி, திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி தொழில்நுட்ப வல்லுநா் எஸ். கோகிலவாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.