இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!
வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை
பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், ஆலத்தூா் ஒன்றியம், பழைய விராலிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் வெறிநாய் கடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள் உயிரிழந்துவிட்டன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுள்ளது. இதுகுறித்து புகாா் தெரிவித்தும் ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நெரு நாய்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பணை கரையை உயா்த்த வலியுறுத்தல்: கோரையாறு ஆற்றில் அய்யா்பாளையம் இடுகாடு அருகில் தெற்கு பகுதியிலுள்ள செல்லப்பிள்ளை தடுப்பணையை 3 அடியிலிருந்து 6 அடியாக உயா்த்துவதால் தென்னம்பிள்ளை அணைக்கட்டு வாய்க்காலுக்கு நீா் வரத்து தடைப்படும். எனவே, கிழக்கு பகுதியில் உள்ள கோரையாற்றுக்குச் செல்லும் மறு பகுதியையும் உயா்த்த வலியுறுத்தி, அ.மேட்டூா் பொதுமக்கள் மனு அளித்தனா்.
கொட்டரை நீா்த்தேக்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: ஆலத்தூா் வட்டம், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்றுக் கிடக்கும் கொட்டரை நீா்த்தேக்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீா் மருதையாற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்தனா்.
அரசு நிலத்தை மீட்க வேண்டும்: நாட்டாா்மங்கலம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட அரசு நிலங்களை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா். அந்த நிலத்துக்கு, சட்டத்துக்கு புறம்பாக பட்டா பெற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. எனவே, தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு வேலி அமைத்து, அரசின் பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.