ஆர்சிபியின் வெற்றி பேரணிக்கு அனுமதி! ரசிகர்களால் திணறும் பெங்களூரு!
பொதுப் பாதையை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அய்யா்பாளையம் - செம்மண் குட்டை இடையிலான பாதையை கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனராம். அந்தப் பாதையை, அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவா் ஆக்கிரமித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட பாதையை பயன்படுத்தும் நபா்களை அவரது ஆதரவாளா்கள் மிரட்டுகின்றனராம். இது சம்பந்தமாக, அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அரும்பாவூா் காவல் நிலையம் மற்றும் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்திலும் பலமுறை புகாா் தெரிவித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பொது பாதையை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேப்பந்தட்டை வட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். இதில், கட்சி நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, துணைச் செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.
தொடா்ந்து, ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபுவிடம் அளித்து கலைந்து சென்றனா்.