நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-யை எட்டியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி(ஜூன் 2) நாட்டில் தற்போது 3,961 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கேரளத்தில் 1,435 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 506, தில்லியில் 483, குஜராத்தில் 338, மேற்கு வங்கத்தில் 331, கர்நாடகத்தில் 253, தமிழ்நாட்டில் 189, உத்தரப் பிரதேசத்தில் 157, ராஜஸ்தானில் 69 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மே 22 ஆம் தேதி 257 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் மே 26-ல் 1,010 ஆக உயர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் தற்போது(ஜூன் 2) 3 மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தில்லி, கேரளம், மகாராஷ்டிரம், தமிழகத்தில் தலா ஒருவர் என 4 பேர் கரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை