6 ஆண்டுகளில் முதன்முறை: கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்காத மோடி?
ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 - 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக, கனடா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு வராத நிலையில், வட அமெரிக்க நாடுகளுக்குப் பயணிக்கும் திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என்றே கூறப்படுகிறது.
கனடாவில் தற்போது புதிய அரசு அமைந்திருந்தாலும், அங்குள்ள காளிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்துமா என்பது தெரிய வராத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கனடா நாட்டுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளும்போது, அதனை சீர்குலைக்கும் வகையில், காளிஸ்தான் பிரிவினைவாதிகள் முயற்சிக்கலாம், அது பிரதமர் மோடி - கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி இடையேயான உறவு வலுப்படுவதைக் கெடுக்கலாம் என்றும் கருதுவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.