`இன்னைக்கு நடுரோட்டுல இருக்கேன்' - சீல் வைக்கப்பட்ட வீடு; கலங்கும் நடிகர் ராஜசேகர் மனைவி தாரா
`நிழல்கள்' படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜசேகர். சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவிலிருந்து விலகிய பிறகு டிவியில் `சரவணன் மீனாட்சி' முதலான சில சீரியல்களில் நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவரின் மனைவி தாரா.
ராஜசேகர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன் வங்கியில் லோன் போட்டு சென்னை வடபழனியில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.
புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறும் முன்பாகவே அவர் இறந்துவிட்ட நிலையில் அந்த வீட்டில் தாரா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்குக் குழந்தை இல்லை. வங்கியில் வாங்கிய கடனைக் கட்டச் சொல்லி தாராவிடம் வங்கி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வருமானத்துக்கு வழி ஏதும் இல்லாத சூழலில் கடனைச் செலுத்த தாரா தரப்பில் கால அவகாசம் கேட்டதாகத் தெரிகிறது. வேறொரு சொத்து இருப்பதாகவும் அதை வைத்து கடனை அடைக்க முயற்சி செய்வதாகவும் தாரா கூறி வந்திருக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் ஏற்கெனவே விகடன் தளத்தில் வெளியாகியுள்ளன.
சுமார் அறுபது வயதை நெருங்கிய சூழலில், அதுவும் நிரந்தர வருமானம் இல்லாத சினிமாவில் இருந்த மறைந்த ராஜசேகருக்கு எந்த அடிப்படையில் வங்கி நிர்வாகம் கடன் தர முன்வந்தது எனவும், கடன் தரப்பட்ட போது இன்சூரன்ஸ் ஏதும் ராஜசேகர் தரப்பில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் வங்கி தரப்பில் நாம் அப்போது கேட்டதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற ஊழியர்கள், தாராவுக்கு கடன் தந்த வங்கி ஊழியர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் தாராவின் வீட்டுக்கு வந்து வீட்டை சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடங்கினார்களாம்.
நீதிமன்றம் சார்பில் அங்கு வந்திருந்த ஒரு ஊழியரிடம் நாம் பேசிய போது, ‘கடனைச் செலுத்தாத வகையில் இந்த நடவடிக்கை/ வங்கி ஏற்கனவே வீட்டை வேறொருத்தருக்கு விற்பனை செய்திருக்கு. வாங்கிய நபர் வீட்டைக் கையகப்படுத்தித் தரக் கேட்டிருக்கார். அவருக்கு வீடு கிடைக்காததால் கோர்ட்டுக்கு வந்திருக்கார். கோர்ட் காவல்துறைக்கும் வங்கி நிர்வாகத்துக்கும் வீட்டைக் கையகப்படுத்தித் தரச் சொல்லி உத்தரவு போட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றத் தடையாக இருந்தார் தாரா.
அந்த வழக்கு திரும்பவும் இன்னைக்கு வருது. அதனால நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை
வங்கி மறைந்த நடிகருக்கு எந்த அடிப்படையில் கடன் வழங்கியதுங்கிற மாதிரியான கேள்விகளூக்கு வங்கிதான் பதில் தர முடியும்’ எனச் சொல்லி விட்டார்.

சீல் வைக்கும் நடவடிக்கைக்கு வந்திருந்த வங்கி அதிகாரிகல் சிலரிடம் பேச முயன்றோம்.
எதுவா இருந்தாலும் வங்கிக்கு வந்துப் பேசுங்க சார், அல்லது திரும்ப இவங்களையும் நீதிமன்றம் போய் தீர்வுக்கு முயற்சி செய்யச் சொல்லுங்க’ எனச் சொல்லி விட்டு நம்மிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டுச் சென்று விட்டனர்.
தாராவிடம் பேசியபோது, ‘என்ன செய்யறதுனு தெரியலை, இன்னைக்கு நடுரோட்டுல இருக்கேன். நடிகர் சங்கம், டிவி நடிகர் சங்கம்னு யாராவது உதவி செஞ்சா நல்லா இருக்கும்’ என்ற அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.