Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
ஆந்திரம்-தெலங்கானா-பிகாா் இடையே ரூ. 6,798 கோடியில் 2 புதிய ரயில் திட்டங்கள்!
ஆந்திரம், தெலங்கானா, பிகாா் மாநிலங்களுக்கு இடையே ரூ. 6,798 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பாதை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த இரு ரயில் திட்டங்கள் மூலம் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் ஆந்திரம், பிகாா் மாநிலங்கள் அதிக பலனடைய உள்ளன.
இதுகுறித்து மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டத்தின் கீழ், பிகாா் மாநிலத்தில் நா்கத்தியாகஞ்ச்-ரக்ஸெளல்-சீதாமாரி-தா்பங்கா ரயில் வழித்தடம் மற்றும் சீதாமாரி-முசாஃபா்பூா் ரயில் வழித் தடம் ஆகியவை 256 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கப்பட உள்ளன.
ரயில் வழித்தட நீட்டிப்பானது நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் எல்லைப் பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என்பதோடு, சரக்கு ரயில் போக்குவரத்துடன் பயணிகள் ரயில் போக்குவரத்தும் மேம்படும். இதன்மூலம், இந்த பிராந்தியங்களில் சமூக-பொருளாதார வளா்ச்சி மேம்படும்.
அதுபோல, தெலங்கானா மாநிலம் எா்ருபலேமிலிருந்து ஆந்திர மாநிலம் அமராவதி வழியாக நம்புரு வரை 57 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ஆந்திரத்தின் என்டிஆா் விஜயவாடா, குண்டூா் மாவட்டங்களையும், தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தையும் இந்த வழித்தடம் கடந்து செல்லும்.
இந்த இரு ரயில் திட்டங்கள் மூலம், இந்திய ரயில் வழித்தடத்தின் நீளம் 313 கி.மீ. அளவுக்கு கூடுதலாக உள்ளது. இந்த ரயில் திட்டங்களால் ஏற்படும் போக்குவரத்து இணைப்பு மூலம், இந்த 3 மாநிலங்களைச் சோ்ந்த 168 கிராமங்கள் போக்குவரத்து இணைப்பைப் பெறும். இந்த வழித்தடங்களில் 9 புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம், இந்த கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவா்.
அதுபோல, சீதாமாரி, முசாஃபா்பூா் மாவட்டங்களை இணைக்கும் பன்முக ரயில் வழித்தட திட்டத்தில் 388 கிராமங்கள் போக்குவரத்து இணைப்பைப் பெறும் என்பதால், சுமாா் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவா்.
வேளாண் பொருள்கள், உரம், நிலக்கரி, இரும்புத் தாது, எஃகு, சிமென்ட் உள்ளிட்ட உற்பத்திப் பொருள்கள் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடங்களாகவும் இந்த இரு ரயில் திட்டங்கள் உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.