பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சர...
ஆபரேஷன் சிந்தூர்: "இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்" - சு.வெங்கடேசனின் கணீர் கேள்விகள்
நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின்போது, பாஜக அரசின் முன்பு கடுமையான கேள்விகளை முன்வைத்தார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
யாரைக் கைகாட்டப் போகிறீர்கள்?
அவர் பேசியதாவது, "பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விவாதத்தை தொடக்கி வைத்து பேசினார். 2016 ஆம் ஆண்டு உரி (Uri) தாக்குதல் நடந்த பொழுது ஆளுங்கட்சி என்ன சொன்னதோ, 2019 ஆம் ஆண்டு பால்கோட் தாக்குதல் நடந்த பின்னணியில் ஆளுங்கட்சி என்ன சொன்னதோ, அதையேதான் இன்றைக்கு மீண்டும் இவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்கள் பேசிய இவ்வளவுக்கும் பிறகு, இந்த தீவிரவாத தாக்குதல் பஹல்காமில் எப்படி நடந்தது, தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தான் ஒரு உதவியோ தகவலை அரசுக்கு கிட்டி இருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது?
இது மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி சி.ஆர்.பி.எஃப்-ன் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்க போவது அதிகாரிகளா, அமைச்சரா? ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்லுங்வீர்களே... உங்கள் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா? நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எல்லா நிகழ்வுகளுக்கும் நேருவிலிருந்து, மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்பீர்களே இப்போது யாரைக் கை காட்டுவீர்கள்?
அதிகம் தோல்வி அடைந்திருப்பது உள்துறையா, வெளியுறவுத்துறையா?!
இந்த தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய பிரதமர் பயணத்திட்டத்தைக் குறைத்துக்கொண்டு நாடு திரும்பினார். நேரடியாக பஹல்காமுக்கு செல்வார் காஷ்மீருக்கு செல்வார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் பீகாரில் தேர்தல் அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்றார்.
எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது, உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும்தான் இருக்கிறது.
சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பிரதமர் இந்த நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் என்றார். கோவிலுக்கு வாருங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படும் பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம்.
பீகாரில் போய் பிரச்சாரம் செய்த பிரதமர், 'கற்பனையே செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்' என்று பேசினார். நாடே அந்த தாக்குதலை எதிர்பார்த்தது. ஆனால் கற்பனையே செய்ய முடியாத தாக்குதலை நடத்தியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான்.
இந்த விவகாரத்தில் அதிகம் தோல்வியடைந்திருப்பது உள்துறை அமைச்சகமா, வெளியுறவுத்துறை அமைச்சகமா என்ற விவாதத்தை இன்று இந்த அவையில் எதிர்க்கட்சிகள் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்!
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் நிறுத்த முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் உள்ளன. அதில் ஒன்றுகூட இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்!
பாலஸ்தீன பிரச்னையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துபோடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது இவற்றின்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்.

இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்க எதிர்க்கட்சியினரின் குழுக்களை அனுப்பினீர்கள். எதிர்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத்தார்கள். யாரையெல்லாம் கடந்த காலங்களில் நீங்கள் தேச துரோகிகள் என்றீர்களோ அவர்களெல்லாம் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு முக்கியம் தேசம்தான்.
எல்லா குழுவிலும் ஒன்றிரண்டு இஸ்லாமிய எம்.பிக்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இஸ்லாமிய உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது இந்த விஷயத்தில்தான். அதையும் எதிர்க்கட்சியினர்தான் கொடுத்திருக்கிறோம்.
ராஜராஜன் தொடங்கிய போரை...
நேற்றையதினம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக வரலாற்றை அறிந்த எழுத்தாளனாக சொல்கிறேன் இந்தியாவில் ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழ பேரரசு மட்டும்தான்.
அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா, ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்துவைக்கவில்லை.
மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் முடித்த போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்.

தோல்வியை மறைக்க கடவுளை பயன்படுத்துவதா?
"பாதுகாப்புத்துறை அமைச்சர் சொன்னார் ராமன் எப்படி இலங்கையின் மீது படையெடுத்து ராவணனைக் கொன்றாரோ அப்படி மோடி இந்த படையெடுப்பை நடத்தியதாக சொன்னார். இன்னொரு அமைச்சர் எழுந்து சிசுபாலனின் தலையை வெட்ட சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்றார்.
"உங்கள் தோல்விகளை மறைக்க கடவுள்களை இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா என்பதை வேதனையோடு கேட்கிறோம்.
சோஃபியா குரேஷியும், அதில் ஷாவும்!
"பாதுகாப்புத்துறை அமைச்சர் மறந்துகூட கர்னல் சோஃபியா குரேஷிக்கு நடந்த அவமதிப்பை, உங்கள் (பாஜக) மத்திய பிரதேச எம்.பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியதை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது சுற்றுலாப்பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரைஓட்டியான அதில் ஷா. அதில் ஷாவின் வீரத்தைப் பற்றி நீங்கள் ஒருமுறை கூட பேசவில்லை. ஒரு அதில் ஷா இல்லை ஆயிரம் அதில் ஷாக்கள் இருக்கிறார்கள் காஷ்மீரில். அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒருவார்த்தை பேசவில்லை நீங்கள்.
வேதனையோடு சொல்கிறோம். மதரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்லும் செய்தி. அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, வெளுக்கவோ முடியாது என்று சொல்லி முடிக்கிறேன்." எனப் பேசினார் சு.வெங்கடேசன்