ஆர்சிபியின் வெற்றி பேரணிக்கு அனுமதி! ரசிகர்களால் திணறும் பெங்களூரு!
ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இரு அணிகள் மோதிய நிலையில், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளதால், ஆர்சிபியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
பெங்களூரு விதான செளதா (கர்நாடக பேரவை மாளிகை) முதல் சின்னசாமி திடல் வரை இன்று(ஜூன் 4) நடைபெறவிருந்த திறந்தவெளி பேருந்து பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியான வெற்றிப் பேரணிக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு விதான செளதா முதல் சின்னசாமி திடல் வரை மாலை 5 மணிக்கு தொடங்கும் பேரணி 6 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் முதலே ஆர்சிபியின் ரசிகர்கள் சின்னசாமி திடல், வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஆகிய இடங்களில் குவிந்து வருவதால், போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு நகரமே திணறி வருகிறது.
இதையும் படிக்க: அதிர்ஷ்ட மந்திரம்: இறுதிப் போட்டிகளில் தோற்காத ஹேசில்வுட்!