`அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்திய நகரங்கள்' - பட்டியலில் மும்பைக்கு முதலிடம்! ச...
ஆழ்கடல் ஆராய்ச்சி: ``வளம்பெற்ற பூம்புகார் பெருமையை வெளிக்கொணர்வோம்'' - முதல்வர் ஸ்டாலின் பதிவு
சங்க காலத்தில் தமிழர்களின் முக்கிய துறைமுகமாக இருந்த பூம்புகார் குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
அது குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு"
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும்,
மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில்,

பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை, பேராசிரியர் திரு. கே. ராஜன் அவர்களின் தலைமையில்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் திரு. சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகறியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்." என்று தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்,
"கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்!
இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!" என்று பதிவிட்டுள்ளார்.