ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்
இளம்பெண் மாயமான வழக்கு; சாமியார் போட்ட திட்டம்; 8 மாதங்களுக்குப் பின் கொலைகும்பல் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம், பழவூர் அருகிலுள்ள மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரின் மகள் கயல்விழி. இவருக்குத் திருமணமாகி, கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 5.10.2024 அன்று கயல்விழி கோயிலுக்குச் சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டுச் சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. கடந்த 8 மாதங்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், வள்ளியூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில், தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், கயல்விழியிடம் செல்போனில் பேசியவர்களின் விவரங்களையும் சேகரித்து விசாரித்தனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சாமியாரான சிவசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவசாமி நகைக்காக கயல்விழியை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை கால்வாயில் வீசியது தெரிய வந்தது,
இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “கணவரை பிரிந்து வாழ்ந்த கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக சாமியார் சிவசாமி கூறியுள்ளார். இதற்காக அவர் மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, கயல்விழியிடம் பலமுறை பணம் பெற்றுள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் அவர் பணம் வாங்கியுள்ளார். ஆனாலும் கயல்விழி கணவருடன் சேர்ந்து வாழாததால் தனது பணத்தை திருப்பித் தருமாறு சிவசாமியிடம் அடிக்கடி கேட்டு வந்தார்.

எனவே, கயல்விழியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் சாமியார் சிவசாமி. சம்பவத்தன்று கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்தவர், அவருடைய சகோதரி மகனான தூத்துக்குடியைச் சேர்ந்த மாயாண்டி ராஜா, வீரவநல்லூரைச் சேர்ந்த கண்ணன், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் காரில் தயாராக இருக்கச் செய்தார்.
அவர்கள் கயல்விழிக்கு பணம் தருவதாகக் கூறி காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் காரில் வைத்தே 4 பேரும் சேர்ந்து கயல்விழியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 7 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு சேரன்மாதேவி அருகே கங்கணாகுளம் பகுதிக்கு சென்று அங்குள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் கயல்விழியின் உடலை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். கயல்விழியின் செல்போன் அழைப்புகளால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது.” என்றனர்.

இதையடுத்து சிவசாமி, மாயாண்டி ராஜா, கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள், கங்கணாங்குளம் மணிமுத்தாறு கால்வாயில் கயல்விழியின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டினர். அப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், கயல்விழியின் எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கைதான 4 பேரிடம் இருந்து 7 பவுன் நகை மீட்கப்பட்டன. கொலைக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.