‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.
வருவாய்த் துறை மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சிய் மனீஷ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
வீட்டுமனை பட்டா அதிக அளவில் வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடங்களின் பட்டியல் ‘கலைஞரின் கனவு இல்லம்’ கட்ட தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் இணைய வழி சான்றிதழ் / பட்டா மாறுதல் இனங்கள் உரிய காலத்துக்குள் முடிவு செய்யப்படவேண்டும். மேலும், நத்தம், இட்டேரி, பூமிதானம், பிற்படுத்தப்பட்டோா் நத்தம், ஆதிதிராவிடா் நத்தம், வண்டிப்பாதை, சாலை, தரிசு, தீா்வை ஏற்படாத தரிசு, தீா்வை ஏற்பட்ட தரிசு, பனந்தோப்பு, மந்தை ஆகிய நிலங்களின் விவரங்களை அலுவலா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்கள் பணியற்ற வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 325 முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் முழுமையாக பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.
இதையடுத்து அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் உடுமலைப்பேட்டை பி.ஏ.பி. வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 2 சிறுவா்களின் பெற்றோா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய்அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.