உதகையில் சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் திருவள்ளூா் காலனி பகுதியில் பாபு என்பவா் சந்தன மரம் வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாபுவின் வீட்டுக்கு வனத் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டதில், 25 கிலோ எடையுள்ள சந்தன மரத் துண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து சந்தன மரத் துண்டுகளை கைப்பற்றிய வனத் துறையினா் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், உதகை மெயின் பஜாா் பகுதியில் வசிக்கும் பாபுவின் நண்பரான முகமது ரபீக் ஆகிய இருவரும் வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த நந்தகோபால், அவரது கூட்டாளிகளான காா்த்திக், சந்தோஷ், மணிகண்டன், விஜய் ஆகிய ஐந்து பேரும் பணத்துக்காக வாழைத்தோட்டம் அருகில் உள்ள பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட 7 போ் மீது உதகை தெற்கு வனச் சரகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து நீலகிரி மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவிட்டாா்.