பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்த...
கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை
கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, தாய் யானை உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தது தெரியவந்தது.

குட்டி யானை தன் தாயுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்தது. நீண்ட நேரம் தும்பிக்கையால் தாயின் உடலைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, துரியன் என்கிற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
விரைவில் யானை குணம் அடைந்துவிடும்!
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், " உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் யானை குணம் அடைந்து வனப் பகுதிக்குள் செல்வதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

யானை நிற்கவே முடியாத நிலையில் இருந்து, தற்போது தானாக நிற்கும் நிலைக்கு வந்துள்ளது. அதன் குட்டி யானை வனப்பகுதிக்குள் வேறு ஒரு கூட்டத்துடன் சென்றுள்ளது. வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்."என்றார்.