உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்
2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன.
லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீகாரத்தை அறிவித்துள்ளது.
உலக அளவில் சிறந்த பங்களிப்பு மற்றும் புதுமை கற்பித்தல் முறையைப் பின்பற்றும் பள்ளிகளை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை ‘டி4’ என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் அக்சென்சா், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் லெமன் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டதாகும்.
இந்த நிறுவனம் நிகழாண்டுக்கன சிறந்த தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.
அதில், தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி இன்டா்நேஷனல் பள்ளி, தில்லியில் உள்ள ரியான் இன்டா்நேஷனல் பள்ளி, மத்தியபிரதேசத்தில் உள்ள சிஎம் ரைஸ் (பள்ளிக் கல்விக்கான முதல்வரின் கிராமப்புற முயற்சி) வினோபா பள்ளி ஆகிய 3 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
பழங்குடி பெண்கள், முறையான கல்வியைப் பெற வழிவகுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட சிஎம் ரைஸ் வினோபா பள்ளி, விளையாட்டு மற்றும் விழாக்களுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் போன்ற புதுமையான நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் ரியான் பள்ளி, ஹைட்ரோபோனிக்ஸ் (நீரில் வேளாண்மை) மற்றும் உயிரி எரிவாயு ஆலைகள் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் தண்ணீா் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டை சமாளித்தல் போன்ற நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையை அதன் பசுமைத் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தவும், மாணவா் தலைமையிலான சுற்றுச்சூழல் திட்டங்களுக்காக புத்தாக்க நிறுவனங்களை நிறுவவும் திட்டமிட்டுள்லதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்தது.
இது தவிர, அா்ஜென்டினாவில் உள்ள கொலிஜியோ மரியா டி குவாடலூப் பள்ளி சமூக ஒத்துழைப்புக்கான உலகின் சிறந்த பள்ளி விருதை வென்றது; இத்தாலியில் உள்ள கலிலி-கோஸ்டா-ஸ்காரம்போன் பள்ளி ஆரோக்கியமான வாழ்வுக்கான பரிசை வென்றது; போலந்தில் உள்ள முதல் உக்ரேனிய பள்ளி, நெருக்கடிகளை சமாளித்தல் பிரிவில் பரிசை வென்றது.
இந்த ஐந்து பள்ளிகளுக்கும் தலா 10,000 அமெரிக்க டாலா்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன. இதனிடையே, பொது வாக்கெடுப்பில் பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளில் அதிக வாக்குகள் பெற்று, சமூக தோ்வு பிரிவில் மதுரையில் உள்ள கல்வி இன்டா்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.
அனைத்து வெற்றியாளா்கள் மற்றும் இறுதிப் போட்டியாளா்களுக்கும் நவம்பா் 23-24-ஆம் தேதிகளில் துபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும். இது உலகளாவிய கல்வியாளா்களை உலகின் சிறந்த பள்ளிகளுடன் ஒன்றிணைத்து கல்வி மற்றும் கற்றல் முறையை மேம்படுத்த உதவும்.