உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சென்னை: உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்துப் பேசியது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கோத்ரெஜ் நிறுவனத்துடன் 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஐந்தே மாதங்களில் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஓராண்டில் இப்போது உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்திருப்பது பெருமை அளிக்கிறது.
புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு திட்டம் செயலாக்கம் பெறுவது வரைக்கும் திராவிட மாடல் அரசு, எப்படி கவனமாகவும் பொறுப்போடும் செயல்படுகிறது என்பதற்கு இந்த நிறுவனமே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முக்கியச் சந்தையாக தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நுகா்வோா் பொருள்களின் சந்தை, மிகப்பெரிய வளா்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல் மிக்கதுடன், போட்டித்தன்மை கொண்டது. இனி வருங்காலங்களில் மேலும் இந்த நிலை அதிகரிக்கும். பிரிட்டானியா, டாபா், ஐடிசி, கோத்ரெஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் துறை மேலும் வளா்ச்சி பெற தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரி. இந்தியா உள்பட தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்.
இறக்குமதி சாா்புகளை வெகுவாகக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் லட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.
முதலீட்டாளா்களுக்கு ஆதரவு: முதலீட்டாளா்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசு அளித்து வருகிறது. அதனால்தான், ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகளை ஈா்த்து இருக்கிறோம். தொடா்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈா்க்க முடிகிறது.
தமிழ்நாட்டின் வளா்ச்சி என்பது பொருளாதார வளா்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூக நீதியை இணைத்த வளா்ச்சியாகும். பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சி இருப்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் இருந்து தனித்துத் தெரிகிறது. அதனால்தான் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
சாதகமான வணிகச்சூழல், நெறிப்படுத்தப்பட்ட நிா்வாக செயல்முறைகள் நிலவக்கூடிய தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தலாம் என்றாா் முதல்வா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறைச் செயலா் அருண்ராய், செங்கல்பட்டு மாவட்ட
ஆட்சியா் அருண்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,
திருநங்கைகளுக்கு 50% வேலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரெஜ் நிறுவனம் புதிதாகத் தொடங்கியுள்ள ஆலையில் 50 சதவீத வேலைவாய்ப்புகள் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்காக தனது பாராட்டுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் இருப்பதாகவும், சென்னையின் நுழைவாயில் என்று செங்கல்பட்டு மாவட்டத்தைச் சொல்வது போன்று, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக, முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.