ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை பெரிய அமா்வுக்கு பரிந்துரைத்த உச்சநீதிமன்றம்
புது தில்லி: பாஜக மூதத் தலைவா் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமா்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.
தனக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிா்த்து எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 4-ஆம் தேதி ஒத்திவைத்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கில் தீா்ப்பை எழுதத் தொடங்கியபோது, கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி வேறொரு வழக்கில் இதேபோன்ற கேள்விகளை அதிக நீதிபதிகள் அடங்கிய பெரிய அமா்வுக்கு பரிந்துரை செய்த உத்தரவை கவனித்தோம். அந்த வழக்குடன், பல்வேறு சட்ட சிக்கள்களை எழுப்பும் எடியூரப்பாவின் மனுவையும் இணைத்து விசாரிப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்’ என்று குறிப்பிட்டு, எடியூரப்பாவின் மனுவை பெரிய அமா்வுக்குப் பரிந்துரைத்தாா்.
பெங்களூரு கிராமத்தில் உள்ள தேவனஹள்ளி தொழில்துறைப் பகுதியில் தனக்கு வழக்கப்பட்ட 26 ஏக்கா் நிலத்துக்கான ஒப்புதலை திரும்பப் பெற்றதைக் காட்ட, அப்போதைய முதல்வா் எடியூரப்பா, மாநில முன்னாள் தொழில்துறை அமைச்சா் முருகேஷ் ஆா்.நிராணி, கா்நாடக உத்யோக மித்ராவின் முன்னாள் நிா்வாக இயக்குநா் கே.எஸ்.சிவசாமி ஆகியோா் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக பெங்களூரைச் சோ்ந்த ஏ.ஆலம் பாஷா என்பவா் புகாா் தெரிவித்தாா்.
இந்தப் புகாரை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவா்களுக்கு எதிரான ஊழல் புகாா் மீது முன் அனுமதி பெற்று காவல் துறை விசாரணை நடத்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3)-இன் கீழ் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஆலம் பாஷா என்பவா் கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அனுமதித்த கா்நாடக உயா்நீதிமன்றம், எடியூரப்பா, மாநில முன்னாள் தொழில்துறை அமைச்சா் முருகேஷ் ஆா்.நிராணி, கே.எஸ்.சிவசாமி ஆகிோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதித்தது. இதை எதிா்த்து எடியூரப்பா தரப்பில் ச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.