தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், அந்த மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகின.
வாக்குப் பதிவு நாளன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, எத்தனை பேர் வாக்களித்தனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பின்னர் 5.30 மணி முதல் 7.30 மணி வரை, 65 லட்சம் பேர் வாக்களித்தனர். 2 மணி நேரத்தில் இத்தனை பேர் வாக்களிப்பது சாத்தியமற்றது.
ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்களாகும். இதை அடிப்படையாக வைத்து கணக்கிட்டால் 65 லட்சம் பேர் வாக்களித்து முடிக்க அதிகாலை 2 மணியாகும்.
எனவே வாக்குப் பதிவின்போது எடுக்கப்பட்ட காணொலியை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கேட்டது. ஆனால் அந்தக் காணொலி வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக அத்தகைய காணொலிகளை கேட்கக் கூடாது என்ற நோக்கில், தேர்தல் நடத்தை விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்பதும், தேர்தல் முறையில் தவறு இருப்பதும் தெளிவாக தெரிகிறது. இதை நான் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளேன் என்றார்.
ராகுல் தேச துரோகி: ராகுலின் கருத்துகள் தொடர்பாக தில்லியில் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுல் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத் துறை மீதான கோபத்தை தேர்தல் ஆணையம் மீது ராகுல் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் ஒரு தேச துரோகி. வெளிநாட்டில் இந்திய ஜனநாயகத்தையும் இந்திய அரசமைப்புச் சட்ட அமைப்புகளையும் அவமானப்படுத்துவதால் மட்டும் அவர் தேச துரோகி என்று கூறவில்லை. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் கோடிக்கணக்கான ரூபாயை அவரும், அவரின் தாய் சோனியாவும் கையாடல் செய்துள்ளனர். இதன் காரணமாகவும் அவர் தேச துரோகியாவார். நேஷனல் ஹெரால்ட் வழக் கில் ராகுலும், அவரின் தாய் சோனியாவும் சிறைக்குச் செல்வர் என்றார்.