எட்டயபுரம் தாய், மகள் கொலை வழக்கு : காட்டிக் கொடுத்த சகோதரி; துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மேலநம்பிபுரத்தில் கடந்த 3-ம் தேதி தாய் சீதாலெட்சுமி, மகள் ராம ஜெயந்தி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பதிவான செல்போன் எண்கள், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் மேலநம்பிபுரம், தாப்பாத்தி, வடமலாபுரம், கீழக்கரந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், முகேஷ் கண்ணன், தாப்பாத்தியைச் சேர்ந்த வேல் முருகன் ஆகியோர் தாய், மகளை கஞ்சா போதையில் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து எதுவும் தெரியாதது போல் ஊருக்குள் சுற்றித் திரிந்த வேல்முருகன், முகேஷ் கண்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்த முயன்ற போது இருவரும் தப்பியோட முயற்சி செய்ததில் இருவரின் கால் முறிந்தது.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முனீஸ்வரனை தீவிரமாகத் தேடி வந்தனர். மூன்று நாட்களாகியும் அவரைப் பற்றி துப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், 5 டி.எஸ்.பிக்கள், 20 இன்பெக்டர்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அயன்வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, புதுப்பட்டி, கீழக்கரந்தை ஆகிய கிராமங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்பட்டும் முனீஸ்வரன் போலீஸாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் அயன்வடமலாபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி முனீஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தங்கநகைகள் மற்றும் பணத்தை பைபாஸ் சாலையில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறிய தகவலின்படி அந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற போது போலீஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் கீழே சரிந்தார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீஸார் சொல்வதென்ன?
முனீஸ்வரனை கைது செய்தது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “முனீஸ்வரனின் கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்ட தகவலறிந்து தலைமறைவானார். காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த அவர் 2 நாட்களாக சாப்பிடாததால் பசியில் நடந்தே அயன்வடமலாபுரத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அவரை ஆசுவாசப்படுத்தி சாப்பாடு கொடுத்த சகோதரி, தனது சகோதரர் தப்பி விடாமல் இருக்க வீட்டின் இருபக்க கதவையும் பூட்டிவிட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது வீட்டை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். இதில் சுதாரித்துக் கொண்ட முனீஸ்வரன் அயன்வடமலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியை நோக்கி ஓடினார்.

இருப்பினும் அவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். முனீஸ்வரனிடமிருந்து 5 சவரன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற இருவரிடமிருந்து 4 சவரன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் பணமும், மூன்று பேரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.” என்றனர். இக்கொலைச் சம்பவத்தில் மதுரை, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டு குற்றவாளிகளை பிடித்துள்ளதாக மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
