எம்பி, எம்எல்ஏக்கள் ஊழல் வழக்கு விவரம் கேட்கும் தவெக: மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவு
சென்னை: தமிழக எம்பி - எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள எம்பி - எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வழங்கக் கோரிய தவெக மனு குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தவெக சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனுவில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தமிழகத்தின் முன்னாள் இந்நாள் எம்பி- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தேன்.
மேலும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தேன். ஆனாலும், நான் கேட்ட தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை .
பொது மக்கள் நலன் கருதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல். எனவே எனது கோரிக்கை தொடர்பான விவரங்களை வழங்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி மாலா முன் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித் நீதிபதி, இந்த மனு குறித்து மாநில தகவல் ஆணையர் 12 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளார்.