தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்
ஏன் ரயில் நிலையங்களில் காட்சிகளை வைக்கிறேன்? மணிரத்னம் விளக்கம்!
இயக்குநர் மணிரத்னம் தன் காட்சி உருவாக்கம் குறித்து பேசியுள்ளார்.
கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டிரைலர், பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. இதனால், இப்படத்தின் வணிகமும் பெரியளவில் நடக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மணிரத்னத்திடம், “உங்கள் படங்களில் தவறாமல் பேருந்து, ரயில் நிலையம், கடல் ஆகியவை இடம்பெற்றுவிடுகிறது. என்ன காரணம்?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு மணிரத்னம், “சினிமா என்பது அசைவுகள் (movement). இரண்டு விதமாக சினிமாவைக் காட்டலாம். ஒன்று, இப்போது நீங்களும் நானும் இதே இடத்தில் அமைதியாகப் பேசிக்கொண்டிருப்பதை அப்படியே காட்டலாம். இன்னொன்று, இருவரும் ஒரு பேருந்தைப் பிடிக்கச் செல்லும்போது நமக்கிடையே காரசாரமான விவாதம் நடந்தால் அது வித்தியாசமானது. சினிமாவில் கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு மனநிலையைக் கொடுத்தால் பின்னணி இடங்கள் இன்னொரு நிலையைத் தரும்.

மேலும், பேருந்தில், ரயில் நிலையத்தில் முழு உலகமும் இருக்கிறது. அங்கு, பேசிக்கொள்ளும் கதாபாத்திரங்களின் பிரச்னை தனியாக இல்லாமல் அவர்களுக்கு உள்ளேயே இருக்கிறது. பின்னணியுடன் (back ground) எடுக்கும்போது அவை உணர்ச்சிகளை மேம்படுத்தவே உதவுகின்றன.” எனக் கூறினார்.
இதையும் படிக்க: தெகிடி இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்!