இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்
`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசு.

ஒரு முதலமைச்சருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள். அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்தது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய கமல், பிறகு எம்பி சீட் கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று மாற்றி பேசுகிறார். கமல்ஹாசன் ராஜ்யசபா பதவிக்காக அவரின் நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டார்.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் அறிவிக்கப்படாமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு அதை பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசுடைய எந்த திட்டங்களையும் மாநில அரசு நிறைவேற்றுவதில்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் வீடு வீடாக பெட்டிகள் செல்லும் என்று விஜய் கூறியது உண்மைதான். திமுக தலைமைக்கு நெருக்கமான ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டி வருவதாக தகவல் வெளியாகிறது. மேலும் சினிமா நடிகைகளுக்கு அவர்கள் லட்சக்கணக்கில் பரிசு பொருள் வாங்கி கொடுப்பதாக கூறுகிறார்கள்.
மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. அதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.” என்றார்.