Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி
காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார்.
அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்தியாவிற்கும், ஜம்மு & காஷ்மீருக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி இருந்தது.
இது மிகப்பெரிய பிரச்னையாகவும் இருந்தது. ஆனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது" என்று பேசியிருந்தார்.

ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பாஜக அரசின் இந்த முடிவைப் பாராட்டி இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சல்மான் குர்ஷித்தின் பேச்சை மேற்கோள் காட்டி பாஜக, காங்கிரஸைச் சீண்டி வந்த நிலையில், சல்மான் குர்ஷித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று பதிவிட்டுள்ளார்.
அதில், "தீவிரவாதத்திற்கு எதிரான பணியில் இருக்கும் போது, இந்தியாவின் செய்தியை உலகிற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, நமது உள்நாட்டில் இன்னும் மக்கள் அரசியல் செய்து கொண்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது. ஒருவர் தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
When on mission against terrorism, to carry India’s message to the world, it’s distressing that people at home are calculating political allegiances. Is it so difficult to be patriotic?
— Salman Khurshid (@salman7khurshid) June 2, 2025