உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
அந்நேரம் கோர்ட் ஊழியர் நவீன் நீதிபதியைப் பார்க்க வந்தார். அவரிடம் விருந்தினருக்கு தேனீரும், பிஸ்கெட்டும் கொண்டு வரும்படி பெண் நீதிபதி கேட்டுக்கொண்டார். சரி என்று சொல்லிவிட்டுச் சென்ற நவீன் தேனீர் எடுத்து வந்தார்.
அப்படி வரும்போது நீதிபதி கேட்ட பிஸ்கெட் கொண்டு வரவில்லை. அதனை எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற நவீன் தாமதமாக நம்கீன் எனப்படும் மிச்சரை எடுத்து வந்து கொடுத்தார்.

அதனை வாங்கிப் பார்த்த நீதிபதி டென்சனாகிவிட்டார். அதன் கெட்ட வாசனையும், சுவையும் பிடிக்காமல் நவீனிடம் நீதிபதி கோபப்பட்டுப் பேசினார்.
வேண்டுமென்றே தூக்கி எறியக்கூடிய மிச்சரை எனக்குக் கொண்டு வந்து சப்ளை செய்வதாகக் கூறி நீதிபதி கோர்ட் ஊழியரைத் திட்டினார்.
அதோடு எதற்காக இது போன்று கெட்டுப்போன மிச்சரை சப்ளை செய்தாய் என்று விளக்கம் கேட்டு நீதிபதி கோர்ட் ஊழியருக்குச் சம்மன் அனுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நீதிபதி அனுப்பி இருக்கும் சம்மனில், "எனக்கு ஏன் திட்டமிட்டு இந்தத் தவறைச் செய்தீர்கள்" என்று கேள்வி எழுப்பி, வரும் 31ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தனது சம்மனில் குறிப்பிட்டுள்ளார்.
சில அடி தூரத்தில் இருக்கும் கப்போர்டில் பிஸ்கெட் பாக்ஸ் தயார் நிலையிலிருந்தது. அப்படி இருந்தும் நான் கேட்ட பிஸ்கெட் கொடுக்காமல் கெட்டுப்போன மிச்சரை கொடுத்து இருப்பதாகவும் நீதிபதி தனது சம்மனில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி அனுப்பி இருக்கும் சம்மன் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. இதற்கு நீதிமன்ற ஊழியர் நீதிபதிக்குக் கையால் எழுதி கொடுத்திருக்கும் பதிலும் வைரலாகி இருக்கிறது.