18தான் காரணம்! ஆர்சிபிக்கு வாழ்த்து தெரிவித்த தேர்தல் ஆணையம்!
ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதிப் போட்டி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இரு அணிகள் மோதிய நிலையில், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளது.
முதல்முறையாக கோப்பை வென்ற ஆர்சிபி அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஆர்சிபிக்கு வெற்றி தெரிவித்ததுடன், வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பதிவில்,
“18 ஆண்டுகள் காத்திருப்பு இறுதியாக முடிந்தது, புதிய சாம்பியன் ஆர்சிபிக்கு வாழ்த்துகள்.
18 வயதாகிறதா? நீங்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது. வாக்காளராகப் பதிவுசெய்து, ஒரு சாம்பியனைப் போல வாக்களிக்கத் தயாராக இருங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகின்றது.